Covid-19: புதுப்பிக்கப்பட்ட பயண நெறிமுறைகளை வெளியிட்ட துபாய்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் கொரோனா பரவுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியின் ஒரு பகுதியாக ஜனவரி 31 முதல் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை அரசு அறிவித்துள்ளது. தற்பொழுது நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய பயண வழிகாட்டுதல்கள் குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்குழு அறிவித்துள்ள புதிய பயண நெறிமுறைகள்
பயணத்திற்கான PCR சோதனை
ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் எந்த நாட்டில் இருந்து வந்தாலும் துபாய்க்கு வந்தவுடன் PCR சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள், GCC குடிமக்கள் மற்றும் துபாய்க்கு பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாவாசிகள் அவர்கள் எந்த நாட்டிலிருந்து வந்தாலும் கொரோனாவிற்கான PCR சோதனையை பயணத்திற்கு முன்னரே மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் புறப்படும் நாட்டினை பொறுத்து துபாய்க்கு வந்தவுடன் மீண்டும் ஒரு PCR சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பயணத்திற்கு முந்தைய PCR சோதனை எவ்வளவு காலம் செல்லுபடியாகும்?
PCR சோதனைகளின் செல்லுபடியாகும் காலம் 96 மணி நேரத்திலிருந்து 72 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, பயணம் மேற்கொள்பவர்கள் இதனை கருத்தில் கொன்டு பயணத்திற்கு முந்தைய மூன்று நாட்களுக்குள் PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து புறப்படும் பயணிகளுக்கான நெறிமுறைகள்
துபாயிலிருந்து புறப்படும் பயணிகளுக்கு அவர்கள் செல்ல வேண்டிய நாட்டினை பொறுத்து ராபிட் PCR அல்லது ரேபிட் ஆன்டிஜென் சோதனை விமான நிலையத்தில் மேற்கொள்வதற்கு வழி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை அனைவரும் முறையாகக் கடைபிடிக்க வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து கடைபிடிப்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் துபாய் சுகாதார ஆணையம் (DHA) 2021 ஜனவரி 31 முதல் முதல் கட்டமாக அமீரக குடிமக்கள் மற்றும் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய துபாய் குடியிருப்பாளர்களுக்கு சினோபார்ம் கோவிட் -19 தடுப்பூசியை வழங்கத் தொடங்குவதாகவும் அறிவித்துள்ளது.
துபாயில் சினோஃபார்ம் தடுப்பூசி நாத் அல் ஹம்ர் சுகாதார மையம், அல் துவார் சுகாதார மையம் மற்றும் அல் மன்கூல் சுகாதார மையத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் தகவலுக்கு, 800 342 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விபரங்கள் அறியலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.