அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு கட்டாய PCR பரிசோதனை..!! கொரோனவிற்கான தடுப்பு நடவடிக்கையாக அறிவித்த ஷார்ஜா..!!
ஷார்ஜாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த ஊழியர்கள் மற்றும் சில குறிப்பிட்ட தனியார் துறை ஊழியர்கள் ஆகியோர் கொரோனாவிற்கான PCR சோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று ஷார்ஜா அரசு தற்பொழுது அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள் அனைவரும் ஒவ்வொரு வாரமும் PCR சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் சலூன்கள் போன்றவற்றில் பணிபுரியும் சேவைத் துறை ஊழியர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விதிமுறைகளில் இருந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும் ஷார்ஜா அரசு தெரிவித்துள்ளது. இதே போன்று அஜ்மான், ராஸ் அல் கைமா மற்றும் உம் அல் குவைன் ஆகிய இடங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கும் இந்த கட்டாய PCR பரிசோதனை முறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், கொரோனா பரவுவதை தடுப்பதற்காக உள்ளூர் அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு கொரோனாவிற்கான புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்ததை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் ஷார்ஜா அரசு தெரிவித்துள்ளது.