துபாய்: தற்போது அமலில் இருக்கும் கோவிட் -19 கட்டுப்பாடுகள் ஏப்ரல் மாதம் வரை நீட்டிப்பு..!! பேரிடர் மேலாண்மை குழு அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து பிப்ரவரி மாதம் முதல் துபாயில் கொரோனாவிற்காக மீண்டும் விதிக்கப்பட்டிருந்த புதிய கட்டுப்பாடுகள் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கட்டுப்பாடுகள் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் புனித ரமலான் நோன்பின் ஆரம்பம் வரையிலும் அமலில் இருக்கும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
தற்பொழுது துபாயில் அமலில் இருக்கும் நடைமுறைகள்:
> பப்கள் / பார்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்
> சினிமாக்கள் மற்றும் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு இடங்கள் உட்பட பொதுமக்கள் அமர்ந்திருக்கும் உட்புற இடங்களில் பார்வையாளர்களின் திறன் 50 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
> ஷாப்பிங் மால்கள் மற்றும் ஹோட்டல்கள் 70 சதவீத திறனில் இயங்க வேண்டும்.
> ஹோட்டல்களில் நீச்சல் குளங்கள் மற்றும் தனியார் கடற்கரைகளுக்குள் 70 சதவீத திறனில் விருந்தினர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
> அதிகாலை 1 மணிக்குள் உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் மூடப்பட வேண்டும். அவர்கள் தங்கள் வளாகத்தில் எந்த பொழுதுபோக்கு நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் குறித்து ஷேக் மன்சூர் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் தலைமையிலான துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு வெளியிட்டுள்ள இந்த முடிவானது, தற்போதுள்ள கொரோனா நிலைமையை மதிப்பீடு செய்தல், தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் செயல்திறனைக் காட்டும் தரவு மற்றும் முன்னணி சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகள் அடிப்படையில் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோவிட் -19 தடுப்பூசி இயக்கத்தின் வேகத்தையும் இந்த குழு பாராட்டியுள்ளது. பிப்ரவரி 26 நிலவரப்படி, நாடு முழுவதும் கிட்டத்தட்ட 6 மில்லியன் தடுப்பூசி அளவுகள் மற்றும் 30 மில்லியனுக்கும் அதிகமான சோதனைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் பேரிடர் மேலாண்மை குழு கூறியுள்ளது.
மேலும் கூறுகையில், “உலகளவில் மேற்கொள்ளப்பட்ட கொரோனாவிற்கான அதிக தடுப்பூசி மற்றும் பரிசோதனை விகிதங்களில் அமீரகமும் ஒன்று. இந்த புள்ளிவிவரங்கள் ஐக்கிய அரபு அமீரக சுகாதார அமைப்பின் வலிமையையும் தயார்நிலையையும் நிரூபிக்கின்றன” என்றும் குழு குறிப்பிட்டுள்ளது. தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் முன்னணி சுகாதார அதிகாரிகளின் அர்ப்பணிப்பு முக்கியமானது என்பதை வலியுறுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறும் குழு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
கோவிட் -19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறுபவர்களை, அவர்கள் தனிநபர்களாக இருந்தாலும் அல்லது நிறுவனங்களாக இருந்தாலும் துபாய் காவல்துறையின் கால் சென்டர் 901 வாயிலாகவோ அல்லது அதன் ஸ்மார்ட் அப்ளிகேஷனில் ‘போலீஸ் கண்’ என்ற சேவை மூலம் புகாரளிக்கலாம் எனவும் குடியிருப்பாளர்களை அறிவுறுத்தியுள்ளனர்.