ADVERTISEMENT

PCR சோதனை சேவைகளை வழங்குவதாக வாட்சப்பில் விளம்பரப்படுத்திய ட்ராவல் ஏஜென்சியை அதிரடியாக மூடிய துபாய்..!!

Published: 19 Feb 2021, 2:05 PM |
Updated: 19 Feb 2021, 2:16 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கான PCR சோதனை சேவைகளை மேற்கொள்வதாக வாட்சப்பில் விளம்பரப்படுத்தியதற்காக ஒரு ட்ராவல் ஏஜென்சி நிறுவனமானது அதிரடியாக மூடப்பட்டுள்ளது. துபாயில் உள்ள பிசினஸ் பே (Business Bay) பகுதியில் இயங்கி வந்து கொண்டிருந்த டிராவல் ஏஜென்சி நிறுவனமானது PCR சோதனைகளை மேற்கொள்வதாகக் கூறி அதற்காக வாட்ஸ்அப் மூலம் சேவையை ரகசியமாக விளம்பரப்படுத்தியதற்காக அந்நிறுவனமானது துபாய் பொருளாதார மேம்பாட்டு துறையால் மூடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் உள்ள சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) மற்றும் துபாய் சுகாதார ஆணையம் (DHA) ஆகியவற்றின் உரிமம் பெற்ற மருத்துவ மையங்கள் மட்டுமே துபாயில் PCR சோதனை சேவைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு PCR சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனாவிற்கான வீட்டு ஆய்வு சேவையின் தரத்தில் அதிருப்தியை வெளிப்படுத்திய நுகர்வோரின் ஒரு புகாரைப் பெற்ற பின்னர் அதிகாரிகள் அந்த ட்ராவல் ஏஜென்சி நிறுவனத்தை விசாரித்துள்ளனர்.

ADVERTISEMENT

அதனை தொடர்ந்து அங்குள்ள பயண முகவர் ஒரு வாட்ஸ்அப் வணிகக் கணக்கைப் (WhatsApp Business Account) பயன்படுத்துவதாகக் கண்டறியப்பட்டது, இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைனில் PCR சோதனைக்கு பணம் செலுத்துவதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் தங்கள் சோதனைக்கான தேதியைத் தேர்வுசெய்து, தங்களின் விபரங்களை நிரப்பி, ஆன்லைனில் வழங்கப்பட்ட மின்னணு இணைப்பு மூலம் பாஸ்போர்ட்டுகளின் நகல்களை இணைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. அதன் பின்னர், அந்த பயண நிறுவனம் உடனடியாக மூடப்பட்டு இந்த விதிமீறலில் இணைந்து செயல்படும் ஆய்வகங்கள் தொடர்பான தகவல்களையும் DHA பெற்றது.

இது குறித்து, துபாய் பொருளாதாரத்தின் வணிகக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குனர் அப்துல்அஜிஸ் அல் டன்னக் கூறுகையில், “தற்பொழுது நிலவி வரும் தொற்றுநோய் நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விதிமீறலில் ஈடுபடும் எந்தவொரு வணிக நிறுவனத்திற்கும் எதிராக நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம். மேலும் அனைத்து வணிக நிறுவனங்களும் அரசு அறிவித்திருக்கும் கொரோனா தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் ஆய்வுக் குழுக்கள் அமீரகம் முழுவதும் தீவிர கள கண்காணிப்பு பிரச்சாரங்களை தொடர்ந்து நடத்துகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும் துபாய் நுகர்வோர் அப்ளிகேஷன் மூலமாகவோ, 600545555 என்ற எண்ணை அழைப்பதன் மூலமாகவோ அல்லது நுகர்வோர் உரிமைகள் வலைத்தளத்தின் மூலமாகவோ கோவிட் -19 முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களின் எதிர்மறையான நடைமுறைகள் அல்லது மீறல்களை புகாரளிக்க துபாய் பொருளாதார மேம்பாட்டு துறை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.