UAE: போலி சான்றிதழ்களை பயன்படுத்தினால் 1 மில்லியன் திர்ஹம் அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!! அமலுக்கு வரும் புதிய சட்டம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் போலி பல்கலைக்கழக பட்டங்கள் மற்றும் கல்விச் சான்றிதழ்களைப் பயன்படுத்துபவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் பிடிக்கப்பட்டால் கடுமையான அபராதம் மற்றும் சிறைத் தண்டனைகளை அறிமுகப்படுத்த புதிய சட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
பெடரல் நேஷனல் கவுன்சில் (FNC) செவ்வாயன்று கூட்டாட்சி வரைவு சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்தின் கீழ் போலி சான்றிதழ்களை பயன்படுத்துபவர்களுக்கு அபராதமானது 30,000 முதல் 1 மில்லியன் திர்ஹம் வரை மற்றும் மூன்று மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 கட்டுரைகளைக் கொண்ட இந்த சட்டமானது, நாட்டில் வேலைகளைப் பெறுவதற்கு போலி கல்விச் சான்றிதழ்களைச் சமர்ப்பிப்பது அல்லது தகுதிவாய்ந்த அதிகாரிகளின் சான்றிதழ் அல்லது ஒப்புதலுக்காக போலி கல்வி சான்றிதழ்களை சமர்ப்பிப்பது ஆகியவற்றை உள்ளடக்கியதாக கூறப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, எந்த வகையிலும் அங்கீகரிக்கப்படாத நிறுவனத்திடமிருந்து கல்விச் சான்றிதழ் வழங்குவதில் பங்கேற்பதும் குற்றமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டினுள் அல்லது வெளியில் இருந்து போலி கல்விச் சான்றிதழ்களை வழங்கும் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத நிறுவனத்தையும் விளம்பரப்படுத்தவோ இந்த சட்டம் தடை செய்கிறது.
அமீரகத்தின் கல்வி அமைச்சர் ஹுசைன் பின் இப்ராஹிம் அல் ஹம்மாடி அவர்கள் முன்னிலையில் இந்த புதிய சட்டத்திற்கு FNC உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதற்கு முன்னர் கடந்த 2018 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 143 போலி கல்விச் சான்றிதழ்கள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர்.
FNC உறுப்பினரும் கல்வி, கலாச்சாரம், விளையாட்டு மற்றும் தகவல் விவகாரங்களுக்கான குழுவின் உறுப்பினருமான சதா சயீத் அல் நக்பி அவர்கள் கூறுகையில் சமீப காலமாக நாட்டில் போலி சான்றிதழ்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருவதையொட்டி அதற்கு எதிராக இந்த புதிய சட்டம் அமல்படுத்தப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், “போலி சான்றிதழ்களைப் பயன்படுத்துவதற்கான நிகழ்வு சமீபத்தில் நாட்டில் அதிகரித்துள்ளது. புதிய விதிமுறைகள் அரசாங்க நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அல்லது வேறு எந்த நோக்கங்களுக்காகவும் வேலை பெற போலி பட்டங்கள் மற்றும் கல்விச் சான்றிதழ்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. பல்கலைக்கழக பட்டங்களை மோசடி செய்யும் நிகழ்வை எதிர்த்து கடுமையான அபராதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன” என்று அல் நக்பி கூறியுள்ளார்.
கல்வி, கலாச்சாரம், விளையாட்டு மற்றும் தகவல் விவகாரங்களுக்கான FNC குழு, இந்த புதிய சட்டத்தை ஒப்புதலுக்காக முன்வைத்ததாகவும், இந்த சட்டத்தின் படி ஒரு சிறப்பு அரசாங்க அமைப்பை நிறுவ வேண்டும் என்றும் கல்வி சான்றிதழ் ஒரு உண்மையான நிறுவனத்தால் வழங்கப்பட்டதா இல்லையா என்பதை சரிபார்க்க ஆணையை வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. இந்த புதிய வரைவுச் சட்டம் ஐக்கிய அரபு அமீரக தலைவர் மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் ஒப்புதலுக்காக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.