UAE: ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் 300க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மூடல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனங்களில் ஊழியர்களிடையே கொரோனா பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டதாலும், நிறுவனங்கள் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றத் தவறியதாலும் 354 வணிகங்களை மூட உத்தரவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் உள்ள அபுதாபி பொருளாதார மேம்பாட்டு துறை (ADDED) செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதை சரிபார்க்க அதன் தொடர்ச்சியான ஆய்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் ஒரு பகுதியாக ஆய்வின் முடிவில் 354 வணிக நிறுவனங்கள் மூட உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பாதித்ததன் காரணமாக அபுதாபி, அல் அய்ன் மற்றும் அல் தஃப்ராவில் 325 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என்றும் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இணங்காத காரணத்தினால் 29 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதே போன்று, தொடர்ச்சியான ஆய்வு பிரச்சாரங்கள் விளைவாக துபாய், ஷார்ஜா போன்ற அமீரகத்தின் மற்ற பகுதிகளிலும் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்காத நிறுவனங்களை மூடுவதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டு வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களை மூடியதில் சமூக இடைவெளியை பராமரிக்கத் தவறியது, முக கவசம் அணியாதது மற்றும் பிற தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதது ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து சமூக பொறுப்புணர்வு, சுகாதார விழிப்புணர்வு மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் குழுக்கள் அறிவித்திருக்கும் நடவடிக்கைகளுக்கு இணங்குவது குறித்து அமீரகம் முழுவதும் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் ADDED அறிவுறுத்தியுள்ளது.
தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கும், தொற்றுநோய்களைக் குறைப்பதற்கும் திறமையான அதிகாரிகளின் முயற்சிகளை ஊக்குவிக்க சமூக உறுப்பினர்கள் மற்றும் வணிக உரிமையாளர்களின் பங்கின் முக்கியத்துவத்தையும் இந்தத் துறை வலியுறுத்தியுள்ளது.
தொழிலாளர்கள் குறிப்பாக வாடிக்கையாளர்களுடன் நேரடியாக கையாளுபவர்கள் ஆகியோரின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் கடைபிடிக்குமாறு வணிக உரிமையாளர்களிடம் கூறப்பட்டுள்ளது. மேலும் விதிகளை மீறும் அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் பொருளாதார மேம்பாட்டு துறை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.