அமீரக செய்திகள்

UAE: தடுப்பூசியின் முதல் டோஸிற்கு பிறகு கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..?? சுகாதார அமைச்சகம் விளக்கம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததை தொடர்ந்து இதுவரையிலும் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் மற்றும் வயது முதிர்ந்தோர் மக்கள்தொகையில் சுமார் 48.6 சதவீதத்தினர் கொரோனாவிற்கான தடுப்பூசி எடுத்துக்கொண்டதாக அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரையிலும் 5.19 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வழங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தடுப்பூசி அளவுகளின் வீதமானது நாட்டில் 100 பேருக்கு 52.56 ஆக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த கொரோனா தடுப்பூசியானது இரண்டு டோஸ்களாக குடியிருப்பாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், தடுப்பூசியின் முதல் டோசினை எடுத்துக்கொண்ட நபர் இரண்டாவது டோசினை எடுத்துக்கொள்வதற்கு முன் கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் அவர் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்த பிறகே இரண்டாவது டோசினை எடுக்க முடியும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் (MoHAP) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஐக்கிய அரபு அமீரக சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஃபரிதா அல் ஹொசானி அவர்கள் கூறுகையில் “முதல் டோஸ் எடுத்த பிறகு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு கொரோனாவிற்கான அறிகுறி இல்லாமலோ அல்லது சிறிய அறிகுறிகள் இருந்தாலோ, அவர்கள் முழுவதுமாக குணமடைந்த பிறகு இரண்டாவது டோஸை எடுத்துக்கொள்ள நாங்கள் அவர்களுக்கு அறிவுறுத்துகிறோம்” என்று விளக்கியுள்ளார்.

மேலும் கூறுகையில், “நோய்த்தொற்று ஏற்பட்டவரின் அறிகுறிகள் மிதமானதாகவோ அல்லது கடுமையான அறிகுறிகளோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலோ, நோயாளி ஒரு மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார். பின்னர் மருத்துவர் அந்நபருக்கு இரண்டாவது டோஸ் தேவையா என்பதைத் தீர்மானிக்க தேவையான நோய் எதிர்ப்பு சக்தி பரிசோதனையைச் செய்வார்”

“தடுப்பூசி போட்ட நபர்களிடையே ஏற்படும் கொரோனா தொற்றுகளில் பெரும்பாலானவை, முதல் டோஸுக்குப் பிறகு நிகழ்கின்றன மற்றும் சமூகத்தில் வைரஸ் பரவி வருவதன் காரணமாக ஏற்படுகின்றன. முதல் டோஸ் பெற்றுக்கொண்ட நபரின் உடலுக்குள் போதுமான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகுவதற்கு முன்பு இது நடக்கிறது. இந்த நோய் எதிர்ப்பு சக்தியானது இரண்டாவது டோஸ் பெற்றதற்கு பின் குறைந்தது இரண்டு வாரங்களுக்குப் பிறகு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

டாக்டர் அல் ஹொசானி அவர்கள் தொடர்ந்து கூறுகையில், “தடுப்பூசி தொற்றுநோயைத் தோற்கடிப்பதற்கான சிறந்த வழியாகும், ஏனெனில் சமூகத்தில் தடுப்பூசி விகிதம் அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்” என்று டாக்டர் அல் ஹொசானி கூறியுள்ளார்.

தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுக்க அனைத்து குடியிருப்பாளர்களும் ஈடுபட வேண்டும் என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. மேலும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் அமைச்சகம் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!