கடந்த இரு நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து சென்னை சென்ற எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்த பயணிகளில் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில், எமிரேட்ஸ் விமானத்தின் பணிப்பெண்களின் துரித நடவடிக்கையால் காப்பாற்றப்பட்ட சம்பவம் அந்த விமானத்தில் பயணித்த மற்றொரு பயணியின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது. முறையான பயிற்சி மற்றும் நிலையான நெறிமுறையைப் பின்பற்றி உயிரை காப்பாற்றிய அந்த பணிப்பெண்களின் செயலை சமூக ஊடங்களில் தற்போது அனைவரும் பெரிதும் பாராட்டியும் புகழ்ந்தும் வருகின்றனர்.
இந்த சம்பவத்தை நேரில் கண்ட சக பயணிகளில் ஒருவரான நரேன் பாலசுப்பிரமணியம் என்பவர் பகிர்ந்த செய்தியில், பெயர் தெரியாத நான்கு பேர் கொண்ட குழு எவ்வாறு பயணியின் உயிரை காப்பாற்றியது என்பது நேரில் கண்டபோது தான் பெரிதும் மகிழ்ந்ததாக தெரிவித்துள்ளார். அந்த பகிர்வில், “இன்று நான் கொரோனா தொற்றுநோய்க்கு என் தந்தையை இழந்த சோகத்தில் கனமான இதயத்துடன் சென்னைக்குச் சென்றபோது, மயக்கமடைந்து விமானத்தில் விழுந்து சுவாசிப்பதை நிறுத்திய ஒரு பயணியின் உயிரை விமானக் குழுவினர் காப்பாற்றியதைக் கண்டது சோகத்தின் மத்தியிலும் எனது மனதை மிகவும் கவர்ந்தது” என்று கூறியுள்ளார்.
மேலும் “அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள், சூழ்நிலையை பொறுமையுடன் கையாண்டனர், விரைவாக செயல்பட்டனர், படிப்படியான நெறிமுறையின் படி ஒவ்வொரு செயலையும் நான்கு குழு உறுப்பினர்களும் தெளிவான தொடர் கட்டளைகளுடன் அவருக்கு ஆக்ஸிஜன் ஆதரவை வழங்கினர், பின்னர் கடலின் நடுவே பரந்த விமானத்தில் CBR நடைமுறைகளுடன் ஒரு உயிரையும் இழக்காமல் அந்த குடும்பத்தை பாதுகாப்பாக அனுப்பினர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சக பயணியின் பதிவின் மூலம் வெளிவந்த இந்த செய்தியை எமிரேட்ஸ் விமான நிறுவனமும் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. எமிரேட்ஸ் விமான நிறுவனம் கூறுகையில், மார்ச் 19 ஆம் தேதி EK 544 விமானத்தில் சென்னைக்கு பயணித்த ஒரு பயணி திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், எங்கள் கேபின் குழு உறுப்பினர்கள் உடனடியாக பயணிகளுக்கு நிலையான நெறிமுறையைப் பின்பற்றி மருத்துவ உதவிகளை வழங்கினர்” என்றும் தெரிவித்துள்ளது.
எமிரேட்ஸ் நிறுவனம் மேலும் கூறுகையில் விமானத்தின் அனைத்து கேபின் குழுவினரும் ஒரு விரிவான மருத்துவ பயிற்சித் திட்டத்தின் மூலம் செல்கிறார்கள், இது விமான பயணத்தின் போது மருத்துவ நிகழ்வுகளை அடையாளம் காணவும் அதனை சமாளிக்கவும் அவர்களை தயார்படுத்துகிறது. எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் எங்கள் குழுவினரின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது என்று தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பலரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கேபின் குழு உறுப்பினர்களால் காட்சிப்படுத்தப்பட்ட சிறந்த சேவை மற்றும் தங்களின் சிறப்பான அனுபவங்களைப் பகிர்ந்தும், கேபின் குழுவினரை ஹீரோக்கள் என்று புகழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.