விடாது பரவும் கொரோனா.. குவைத்தில் மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு..!!
குவைத்தில் கொரோனா பாதிப்பானது தொடர்ந்து அதிகரிப்பதால் குவைத் அரசானது பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சமீப காலமாக மேற்கொண்டு வருகின்றது. கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பினால் குவைத் நாட்டின் அமைச்சரவையானது வரும் மார்ச் 7, ஞாயிற்றுக்கிழமை முதல் மாலை 5 மணி முதல் அதிகாலை 5 மணி வரை என ஒரு மாதத்திற்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பகுதி நேர ஊரடங்கு உத்தரவு விதிக்க முடிவு செய்துள்ளதாக தற்பொழுது தெரிவித்துள்ளது.
குவைத் பிரதம மந்திரி ஷேக் சபா கலீத் அல் ஹமாத் அல் சபா அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டவர்கள் குவைத் வருவதற்கான தடையை மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிப்பதாகவும் அறிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 3 ம் தேதி, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உணவகங்கள், வரவேற்பு மண்டபங்களை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மூடவும், சுகாதார கிளப்புகள், ஜிம்கள் மற்றும் வரவேற்புரைகள், முடிதிருத்தும் கடைகள் மற்றும் ஸ்பாக்களின் செயல்பாடுகளை நிறுத்தவும் அமைச்சரவை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வரவேற்புரைகள், ஜிம்கள் மற்றும் சுகாதார கிளப் மற்றும் பிற வணிக நடவடிக்கைகளை மார்ச் 7 ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படும் என்றும் இருப்பினும் ஊரடங்கு நேரமான மாலை 5 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை அவை மூடப்பட வேண்டும் என்றும் அமைச்சரவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஊரடங்கு நேரத்தின் போது மக்கள் தொழுவதற்கு மசூதிகளுக்கு நடந்து செல்லலாம் என்றும், அதே நேரத்தில் மருந்தகங்கள் மற்றும் உணவுக் கடைகள் போன்றவை டெலிவரி சேவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முக கவசங்களை உபயோகப்படுத்துவது உள்ளிட்ட அரசு அறிவித்துள்ள விதிகளை மீறுபவர்களுக்கு, 16,000 டாலர் வரை அபராதம் விதிக்கப்பட்டு மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.