அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..!! மீண்டும் ஊரடங்கை அறிவித்த ஓமான்..!!
ஓமானில் சமீப காலமாக கொரோனா நோய்த்தொற்று பாதிப்பானது அதிகரித்து வருவதை தொடர்ந்து மீண்டும் ஊரடங்கை ஓமான் அரசு அறிவித்துள்ளது. இதனடிப்படையில், மார்ச் 28 முதல் மீண்டும் துவங்கவிருக்கும் இரவு நேர ஊரடங்கானது ஏப்ரல் 8 வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கானது இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் இந்த நேரங்களில் அனைத்து வணிக நடவடிக்கையையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தனிநபர்கள் மற்றும் போக்குவரத்து இயக்கத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோய் சம்பந்தமான முடிவுகளை மேற்கொள்ளும் உச்சக் குழுவால் அடுத்த 10 நாட்களுக்கு இந்த இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சக்குழு இது குறித்து வெளியிட்ட ஒரு அறிக்கையில், “கோவிட் -19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த, மார்ச் 28 முதல் ஏப்ரல் 8 வரை ஊரடங்கு உத்தரவு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கடைகள், கஃபேக்கள், உணவகங்கள் மற்றும் பிற வர்த்தக நிலையங்கள் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மூடப்படும்” என்று தெரிவித்துள்ளது.
இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஓமானில் செயல்படும் பேருந்துகள் மற்றும் பெர்ரி சேவைகள் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஸ்கட் மற்றும் சலாலாவில் இயங்கும் இன்டெர்சிட்டி பேருந்துகள் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓமானில் தற்போதைய நிலவரப்படி இதுவரையிலும் மொத்தம் 153,000 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 1,650 பேர் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.