ஓமானில் வணிக நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட இரவு நேர தடையை ஏப்ரல் 3 வரை நீட்டித்த உச்ச குழு..!!
ஓமான் நாட்டில் எரிபொருள் நிலையங்கள், தனியார் சுகாதார நிறுவனங்கள், மருந்தகங்கள் மற்றும் எரிபொருள் நிலையங்கள் உள்ளே டயர்களை விற்கும் மற்றும் பழுதுபார்க்கும் கடைகள் ஆகியவற்றைத் தவிர்த்து, ஓமான் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வணிக நடவடிக்கைகளையும் இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை மூடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஏப்ரல் 3, 2021 சனிக்கிழமை வரை நீட்டித்து உச்சக் குழு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் அதனுடன் வரும் மார்ச் 21, 2021 ஞாயிற்றுக்கிழமை முதல் ஏப்ரல் 1, 2021 வியாழக்கிழமை வரை அரசு மற்றும் பிற பொது நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கை திறனை 70% ஆக குறைக்கவும் உச்சக் குழு முடிவு செய்துள்ளது. அதேபோன்று இங்கிலாந்து நாட்டிலிருந்து வரும் அனைத்து நேரடி விமானங்களையும் தடை செய்யவும் உச்சக் குழு முடிவு செய்துள்ளது. இந்த தடையானது கடந்த 14 நாட்களில் இங்கிலாந்து வழியாக பயணித்த போக்குவரத்து பயணிகளுக்கும் பொருந்தும் என்றும் உச்சக் குழு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் தடைவிதிக்கப்பட்டிருந்த கடற்கரைகளை தனிப்பட்ட விளையாட்டு நடவடிக்கைகளுக்காக திறக்க உச்சக் குழு முடிவு செய்துள்ளது, மேலும் கடற்கரையில் ஒன்றுகூடுதல் மற்றும் கூட்டமாக நடைபெறும் விளையாட்டு நடவடிக்கைகள் மீதான தடை தொடர்ந்து அமலில் இருப்பதாகவும் குழு வலிவுறுத்தியுள்ளது.
வீடுகள், பணியிடங்கள், பொது இடங்களில் அதிகாரிகள் வழங்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்றும் அதேபோன்று வீடுகள், பண்ணைகள் மற்றும் வேறு எந்த இடங்களிலும் குடும்பம் மற்றும் சமூகக் கூட்டங்கள் உட்பட எந்தவிதமான கூட்டங்களையும் மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு உச்சக் குழு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.