Covishield தடுப்பூசி போட்டவர்களுக்கு தனிமைப்படுத்தலில் விலக்கு.. அனைத்துப் பயணிகளுக்கும் 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்ட் கட்டாயம்..!! புதிய அறிவிப்பை வெளியிட்ட கத்தார்..!!
கத்தார் நாட்டிற்கு வரும் அனைத்து பயணிகளும் கத்தார் வருவதற்கு 72 மணி நேரத்திற்குள் பயணிகள் புறப்படும் நாட்டில் உள்ள உள்ளூர் சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மருத்துவ மையத்தில் கோவிட் -19 சோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதை கத்தாரின் பொது சுகாதார அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது.
இந்த புதிய நெறிமுறையானது ஏப்ரல் 25 ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதாரக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மரியம் அலி அப்துல்-மாலிக், கத்தாருக்கு வரும் அனைத்து பயணிகளும் 72 மணி நேரத்திற்குள் உள்ளூர் சுகாதார அமைச்சினால் அங்கீகாரம் பெற்ற மருத்துவ மையத்தில் கோவிட் -19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு எதிர்மறை சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பொது சுகாதார அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்டபடி, சில நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்திற்கு வந்தவுடன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே போன்று, கொரோனாவிற்கான கோவிஷீல்டு தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட கத்தார் குடியிருப்பாளர்கள் இந்தியாவில் இருந்து கத்தார் வரும் போது அவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றவர்கள் கத்தார் நுழைந்தவுடன் அவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்பதை கத்தார் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனடிப்படையில், பயணிகள் தடுப்பூசிக்கான இரண்டு டோஸ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்டு 14 நாட்கள் பூர்த்தி செய்த பின்னர் தடுப்பூசி சான்றிதழை தன்னுடன் வைத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
அத்துடன் கத்தார் அதிகாரிகளின் புதிய ஆலோசனையின் படி, ஏப்ரல் 25 முதல், கத்தாருக்குப் பயணிக்கும் நபரகள், 72 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்திலிருந்து எதிர்மறை கோவிட் -19 RT-PCR சோதனை சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.