அமீரக செய்திகள்

ஏழைகளுக்கு உணவளிக்க 1 மில்லியன் திர்ஹம் நன்கொடை அளித்த Lulu குழும தலைவர்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகம்மது  பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால்துவங்கப்பட்ட 10 மில்லியன் மீல்ஸ் பிரச்சாரத்தின் (10 million meals campaign) வெற்றியைத் தொடர்ந்து, தற்பொழுது இந்த வருட ரமலான் மாதத்தில் 100 மில்லியன் மீல்ஸ் பிரச்சாரமானது (100 million meals campaign) 20 நாடுகளைச் சேர்ந்த ஏழை, எளியோருக்கு உணவளிக்கும் வகையில் துவங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் தங்களால் முடிந்த உதவியினை செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புகழ்பெற்ற லுலு குழுமத்தின் தலைவரான தொழிலதிபர் யூசுப் அலி எம்.ஏ., பிராந்தியத்தின் மிகப்பெரிய உணவுத் திட்டமான 100 மில்லியன் மீல்ஸ் திட்டத்தின் கீழ், ஒரு மில்லியன் உணவை வழங்குவதற்காக 1 மில்லியன் திர்ஹம் நன்கொடை அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “புனித ரமலான் மாதத்துடன் ஒத்துப்போவதோடு, தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் குழுக்களுக்கு உதவிக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், ‘100 மில்லியன் உணவு’ பிரச்சாரம் மிகவும் தனித்துவமான மனிதாபிமான முயற்சிகளில் ஒன்றாகும். சமூக அக்கறையுள்ள ஒரு அமைப்பாக இருக்கும் நாங்கள், சமூகத்திற்குத் திருப்பித் தருவதாக எப்போதும் நம்புகிறோம், இந்த உன்னத செயலுக்கு எங்களது அனைத்து ஆதரவையும் தருவதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

பிரச்சாரத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும் ஒவ்வொரு திர்ஹமும், ஒரு உணவை தயாரிக்கக்கூடிய அடிப்படை உணவு பொருட்களை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலமாக 20 நாடுகளில் இருக்கும் மக்கள் பயனடைவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதே போல், ஐக்கிய அரபு அமீரகத்தில் கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு 125,000 உணவை வழங்கிய ‘10 மில்லியன் உணவு’ பிரச்சாரத்திற்கு கடந்த ஆண்டு லுலு குழுமம் 1 மில்லியன் திர்ஹம் நன்கொடை அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!