3 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள குழந்தைகளுக்கு முக கவசம் கட்டாயம்..!! அமீரக சுகாதாரத்துறை அறிவிப்பு..!!
கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரக சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளரும், அபுதாபி பொது சுகாதார மையத்தின் (ADPHC) தொற்று நோய்கள் துறை இயக்குநருமான டாக்டர் ஃபரிதா அல் ஹோசானி அவர்கள்தெரிவித்துள்ளார்.
மூன்று வயதிற்குக் கீழுள்ள குழந்தைகள் ஃபேஸ் ஷீல்டு (face shield) அணிய வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அத்துடன் குழந்தைகளை நெரிசலான பகுதிகளுக்கு, குறிப்பாக விளையாட்டு மைதானங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்கும்படி அவர் குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், அனைவரின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய உரிமம் பெற்ற மருத்துவ முக கவசங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை டாக்டர் ஃபரிதா வலியுறுத்தினார்.
முன்னதாக, அதிகாரிகள் சுவாச பிரச்சினைகள் அல்லது நாட்பட்ட நோய்கள் உடைய குழந்தைகளுக்கு முக கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிப்பதாக கூறியிருந்தனர். சொந்தமாக முக கவசங்களை அகற்றுவதில் சிரமம் உள்ள குழந்தைகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
தற்பொழுது குழந்தைகளுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவதற்கான பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால், குழந்தைகளுக்கும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
டாக்டர் ஃபரிதா தொடர்ந்து கூறுகையில், கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி போடுமாறு குடியிருப்பாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் உலகின் சிறந்த தடுப்பூசிகளைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.