UAE: பேருந்து நிறுத்தங்களில் உங்கள் வாகனங்களை நிறுத்தினால் 2,000 திர்ஹம் அபராதம்..!! எச்சரிக்கை விடுக்கும் அதிகாரிகள்..!!
தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு அல்லது பயணிகளை அழைத்துச் செல்ல அல்லது இறக்கிவிட பேருந்து நிறுத்தங்களைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சட்டவிரோத செயலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு 2,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று அபுதாபியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நேரங்களில், நியமிக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் வாகனங்கள் நிறுத்தப்படும் போது, அந்த நிறுத்தத்திற்கு வரும் பேருந்துகள் நிற்பதற்கு இடமில்லாமல், சாலையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
சுமூகமான போக்குவரத்து ஓட்டம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, வாகன ஓட்டிகள் வாகனங்களை பேருந்து நிறுத்தங்களில் நிறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது பேருந்தின் இயங்கும் நேரத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கிறது. சில சந்தர்ப்பங்களில், ஒரு போக்குவரத்து சிக்னலுக்கு அருகில் ஒரு பேருந்து நிறுத்தம் அமைந்திருந்தால், இந்த நடைமுறை பல திசைகளிலும் போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்தி சில நேரங்களில் விபத்துக்களுக்கும் வழிவகுக்கிறது.
இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு, அபுதாபியின் நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) சமூக உறுப்பினர்களை தங்கள் வாகனங்களை பேருந்து நிறுத்தங்களில் அல்லது பொது போக்குவரத்து வசதிக்காக நியமிக்கப்பட்டிருக்கும் வேறு எந்த பகுதிகளிலும் நிறுத்த வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது.
இந்த விதியினை மீறும் நபர்களைக் கள ஆய்வாளர்கள் மற்றும் கேமராக்கள் மூலம் கண்டறிந்து, அவர்களுக்கு 2,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு பயணிகளை அழைத்துச் செல்லவும், இறக்கவும் பிரத்யேக பார்க்கிங் இடங்கள் உள்ளன என்றும் இந்த இடங்களை வாகன ஓட்டிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ITC கேட்டுக் கொண்டுள்ளது.