இந்தியாவில் இருந்து அமீரகம் பயணிக்க மாற்று வழி உண்டா?? பயணத் தடையில் இருந்து விலக்கு பெற்றவர்கள் யார்??
ஐக்கிய அரபு அமீரகம் ஏப்ரல் 24 ஆம் தேதி இரவு 11.59 மணி முதல் இந்தியாவில் இருந்து அனைத்து பயணிகள் விமானங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் வியாழக்கிழமை மாலை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த தற்காலிகத் தடையானது 10 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் அதன் பின்னர் நிலவி வரும் சூழ்நிலையை மதிப்பாய்வு செய்து மேற்கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அமீரகத்தின் பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (GCAA) மற்றும் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரழிவுகள் அவசரநிலை மேலாண்மை ஆணையம் (NCEMA) ஆகியவை இந்தியாவில் இருந்து வரும் தேசிய மற்றும் சர்வதேச விமானங்களுக்கான உள்வரும் அனைத்து விமானங்களையும் நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளன.
மாற்றுவழி உண்டா??
மேலும் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளின் வழியாக அமீரகத்திற்கு வரும் பயணிகள் அந்த நாடுகளில் 14 நாட்களுக்கு குறையாமல் தங்கியிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதனடிப்படையில், கட்டாயம் அமீரகத்திற்குப் பயணிக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளவர்கள் இந்தியாவில் இருந்து வேறொரு நாட்டிற்குப் பயணித்து அங்கு 14 நாட்கள் தங்கிய பின்னர், அந்த நாட்டிலிருந்து அமீரகம் வரலாம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்காலிகத் தடையின் போது பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டவர்கள்
- ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள்
- டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள்
- அரசாங்கப் பிரதிநிதிகள்
- வணிக விமானங்கள் மற்றும் கோல்டன் ரெசிடன்ஸி விசா வைத்திருப்பவர்கள்
மேற்குறிப்பிட்ட பிரிவினர் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டாலும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களுக்கான தடுப்பு நடவடிக்கைகளில் 10 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் மற்றும் விமான நிலையத்திற்கு வந்த பின் மேற்கொள்ளப்படும் PCR சோதனைகள் மற்றும் நாட்டிற்குள் நுழைந்த நான்காவது மற்றும் எட்டாவது நாட்களில் எடுக்கப்படும் PCR சோதனைகள் ஆகியவை அடங்கும்.
மேலும், அசல் சோதனை அறிக்கைகளுக்கான QR குறியீட்டை வழங்கும் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களிலிருந்து புறப்படுவதற்கு முன்னர், 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR சோதனைகளின் எதிர்மறை அறிக்கைகளை அவர்கள் வைத்திருக்க வேண்டும்.
COVID-19 தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த நாட்டில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் வழங்கிய முன்கூட்டிய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு சுகாதார நடவடிக்கைகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விமானத் தடையானது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா செல்லும் பயணிகள் விமானங்களுக்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான சரக்கு விமானங்களுக்கும் பொருந்தாது என்றும் அவை எப்போதும் போல் தொடர்ந்து இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
GCAA வியாழக்கிழமை பிற்பகுதியில் வெளியிட்ட அறிக்கையில் அமீரகத்திலிருந்து இந்தியாவுக்கு புறப்படும் விமானங்களின் சேவைகளானது இந்த தற்காலிகப் பயணத் தடையின் போது நிறுத்தப்படாது என தெளிவுபடுத்தியுள்ளது.
பயணத்தடையால் பாதிக்கப்பட்ட பயணிகள்
இந்த பயணத்தடையால் பாதிக்கப்பட்டிருக்கும் பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடுவதற்கும், தாமதமின்றி தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்யவும் விமான நிறுவனங்களின் அறிவிப்புகளைத் தெரிந்து, அவற்றை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் இது குறித்து தெரிவிக்கையில், “பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்கள் பயண முகவர் அல்லது எமிரேட்ஸ் தொடர்பு மையத்தை மறு முன்பதிவு விருப்பங்களுக்காக தொடர்பு கொள்ள வேண்டும்” என்று தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
ஃப்ளைதுபாய் நிறுவனம் கூறுகையில், “பயணிகளின் விமானம் ரத்துசெய்யப்பட்டால், அவர்களுக்கு பணத்தைத் திருப்பித் தரப்படும் அல்லது விமான டிக்கெட்டிற்கான முன்பதிவை பின்னொரு நாளில் பயணம் செய்வதற்கு மறு முன்பதிவு செய்வதற்கான விருப்பம் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
“டிராவல் ஏஜெண்ட் மூலம் டிக்கெட்டுகளை வாங்கிய பயணிகள் உதவிக்காக டிக்கெட்டை வாங்கிய நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று எதிஹாட் ஏர்வேஸ் கூறியுள்ளது.
பயணத் தடைகள் குறித்த அறிவிப்புக்கு பதிலளித்த ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதர் பவன் கபூர், “ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். தற்போதைய COVID-19 தொற்றுநோயைக் கையாள்வது உட்பட, சுகாதாரத் துறையில் நாங்கள் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று கூறியுள்ளார்.