ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய வெளிநாட்டவர்கள் பெறும் வேலை வாய்ப்புகளை (Job Offer) இனி துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இயக்கும் அப்ளிகேஷன் மூலம் சரிபார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகை, தகவல், கலாச்சாரம் (PIC) மற்றும் கல்விக்கான தூதர் சித்தார்த்த குமார் பரெய்லி கூறுகையில், அமீரகத்தில் வேலை தேடுபவர்கள் தங்களின் வேலை வாய்ப்புக் கடிதங்களை பிரவாசி பாரதிய சஹாயதா கேந்திரா (Pravasi Bharatiya Sahayata Kendra, PBSK) மொபைல் அப்ளிகேஷனில் PDF வடிவத்தில் பதிவேற்றலாம் என்று தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், “துணைத் தூதரக அதிகாரிகள் ஆவணத்தின் உண்மையான தன்மையை சரிபார்த்து வேலை தேடுபவர்களுக்கு அறிவிப்பார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை தேடி வரும் இந்தியர்களில் பல பேர் பாதிப்புக்குள்ளாகும் வேலை மோசடிகளை இந்த சேவை தடுக்கும். இந்த சேவையைப் பயன்படுத்த அதிகமான இந்திய குடிமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று அவர் விளக்கியுள்ளார்.
ஜனவரி 21 ஆம் தேதி இந்திய வெளியுறவு துறை அமைச்சர் வி முரளீதரன் அறிமுகப்படுத்திய இந்த PBSK அப்ளிகேஷன், அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான பதிவிறக்கங்களையே கொண்டுள்ளது என்று பரெய்லி தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், “எங்கள் எல்லா தளங்களிலும் பல கேள்விகளைப் பெறுகிறோம். தற்போது, பெரும்பாலான கேள்விகள் தொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பானவை, ஒரு சிலர் சட்ட ஆலோசனை கேட்கிறார்கள், மற்றவை வேலை தொடர்பான பிரச்சனைகளாக இருக்கின்றன. இந்த அப்ளிகேஷன் வேலை வாய்ப்புக் கடிதத்தின் உண்மையான தன்மையை ஆராய்வதுடன், அமீரகத்தில் துயரப்படும் பெண் தொழிலாளர்கள், திருமணம் மற்றும் சட்ட ஆலோசனை, தொழிலாளர் தொடர்பான பிரச்சினைகள், மின்-இடம்பெயர்வு, இறப்பு பதிவு மற்றும் பல தூதரக சேவைகளுக்கான பயன்பாடுகளையும் வழங்குகிறது” என்று விளக்கியுள்ளார்.
கல்வி ஆவணங்களை சரிபார்க்கும் நடைமுறைகளையும் இதில் சரிபார்க்கலாம் என்றும் துன்பப்படும் நபர்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் PBSK ஊழியர்களுடன் கலந்துரையாடலாம் மற்றும் PBSK கவுன்சிலிங் சேவைக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மொழிகளை அறிமுகப்படுத்துவது உட்பட, கூடுதல் செயல்பாடுகள் இந்த அப்ளிகேஷனில் தொடர்ந்து இணைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த சேவையானது இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் கிடைக்கிறது.
மேலும் இந்தியர்கள் எந்தவொரு உதவிக்கும் PBSK மொபைல் அப்ளிகேஷன் மற்றும் 80046342 என்ற கட்டணமில்லா எண் மூலம் இந்தியத் தொழிலாளர்கள் தூதரகத்துடன் தொடர்ந்து இணைந்திருக்குமாறு தூதரகம் கேட்டுக்கொண்டது. அத்துடன் ஏதேனும் துன்பத்தில் உள்ளவர்கள் தங்கள் கேள்விகளை PBSK.dubai@mea.gov.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.