இந்தியாவில் இருந்து துபாய் பயணிப்பவர்களுக்கான PCR விதிமுறைகளில் மாற்றம்..!! புதிய அறிவிப்பை வெளியிட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்..!!
இந்தியாவில் இருந்து துபாய் பயணிக்கும் அனைத்து பயணிகளும் வரும் ஏப்ரல் 22 முதல், 48 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட செல்லுபடியாகும் எதிர்மறை கோவிட் -19 சோதனை சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்று தற்பொழுது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது. 48 மணி நேரக் கணக்கானது PCR சோதனைக்கான மாதிரி சேகரிக்கும் நேரத்திலிருந்து எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவில் இருந்து துபாய் பயணிப்பவர்கள் 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட PCR சோதனைக்கான எதிர்மறை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு தற்பொழுது வரை நடைமுறையில் இருக்கும் பட்சத்தில், ஏப்ரல் 22 முதல் 48 மணி நேரமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, சோதனைக்கான மாதிரி சேகரிப்பின் தேதி மற்றும் நேரம், சோதனை முடிவு பெறப்படும் தேதி மற்றும் நேரம் ஆகியவை துல்லியமாக இருப்பதை பயணிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் சான்றிதழானது ஆங்கிலம் அல்லது அரபி மொழியில் இருக்க வேண்டும் என்றும் பயணிகள் பயணிக்கும் இடத்திலுள்ள சான்றளிக்கப்பட்ட ஆய்வகத்திலிருந்து (authorized lab) PCR சோதனை முடிவுக்கான சான்றிதழ் பெறப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Attention passengers travelling from India to Dubai⚠️@cgidubai pic.twitter.com/maXMKSUCkY
— Air India Express (@FlyWithIX) April 19, 2021
அத்துடன், கொரோனாவிற்கான எதிர்மறை சான்றிதழில் அசல் அறிக்கையுடன் (original report) இணைக்கப்பட்ட ஒரு QR குறியீடும் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அறிக்கையின் உண்மைத்தன்மையை விமான நிறுவனம் மற்றும் துபாயில் உள்ள அதிகாரிகளால் சரிபார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.