Covid19- இந்தியா: ஆக்ஸிஜன் பற்றாக்குறை.. 80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனைக் கொடுத்து உதவும் சவூதி அரேபியா..!!
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் மருத்துவமனைகள் பெரிதும் இக்கட்டுக்குள்ளாகி வருகின்றன.
இந்நிலையில், சவூதி அரேபியா 80 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜனை இந்தியாவிற்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளது. அதானி குழுமம் மற்றும் லிண்டே நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் விநியோக ஏற்றுமதி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் இது்குறித்து தெரிவிக்கையில், “இந்திய தூதரகம் அதானி குழுமம் மற்றும் லிண்டேவுடன் இணைந்து 80 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜனை இந்தியாவுக்கு அனுப்புவதில் பெருமிதம் கொள்கிறது. சவூதி அரேபியாவின் சுகாதார அமைச்சகம் அளித்த உதவி, ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு எங்கள் மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்துள்ளது.
அதற்கு நன்றி தெரிவித்து பதிலளித்த அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, “உண்மையில், செயல்கள் சொற்களை விட சத்தமாக பேசுகின்றன. உலகெங்கிலும் இருந்து ஆக்ஸிஜன் விநியோகத்தை பாதுகாப்பதற்கான அவசர பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். 80 டன் திரவ ஆக்ஸிஜனைக் கொண்ட 4 ISO கிரையோஜெனிக் (cryogenic) தொட்டிகளின் முதல் ஷிப்மெண்ட் இப்போது தம்மாமில் இருந்து முந்த்ராவுக்கு சென்று கொண்டிருக்கிறது”.
“மேலும், நாங்கள் குஜராத்தில் விரைவாக விநியோகிக்க கூடுதல் ஆக்ஸிஜன் பொருட்களையும் ஏற்பாடு செய்கிறோம். தினமும், எங்கள் அணிகள் கடுமையாக உழைத்து, 1,500 சிலிண்டர்களை மருத்துவ ஆக்ஸிஜனுடன் நிரப்பி, அவற்றை கச் (kutch) மாவட்டத்தில் தேவைப்படும் இடங்களுக்கு கொண்டு செல்கின்றன”
“ISO கிரையோஜெனிக் டாங்குகள் தவிர, லிண்டே சவுதி அரேபியாவிலிருந்து 5,000 மருத்துவ தர ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் நாங்கள் பாதுகாத்து வருகிறோம். இவையும் விரைவில் இந்தியாவுக்கு அனுப்பப்படும். இது தொடர்பாக எங்களுக்கு உதவிய சவுதி அரேபியாவிற்கான எங்கள் தூதர் டாக்டர் அசாஃப் சயீத்துக்கு நான் நன்றி கூறுகிறேன்” என்று கூறியுள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் ஆக்ஸிஜனின் தேவையை எதிர்த்து, ‘ஆக்ஸிஜன் மைத்ரி’ செயல்பாட்டின் கீழ் கொள்கலன்கள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்க இந்தியா பல்வேறு நாடுகளை நாடியுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் நான்கு கிரையோஜெனிக் தொட்டிகளை இந்திய விமானப்படை சனிக்கிழமை கொண்டு வந்தது. இந்த கொள்கலன்கள் சிங்கப்பூரிலிருந்து IAF இன் C 17 ஹெவி-லிஃப்ட் விமானங்களால் விமானத்தில் இந்தியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டன.
மேலும், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அதிக திறன் கொண்ட ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் டேங்கர்களை இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.