UAE: மஹ்ஸூஸ் டிராவில் 1 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை பகிர்ந்த 6 இந்தியர்கள்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 20 வது வாராந்திர மஹ்சூஸ் (Mahzooz) டிராவில் இரண்டாம் பரிசான 1 மில்லியன் திர்ஹமை ஆறு இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதனையடுத்து, ஆறு பேருக்கும் தலா 166,667 திர்ஹம் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு நபர்களில் 5 நபர்கள் கேரளாவினைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹ்சூஸ் டிராவில் வெற்றி எண்களாக அறிவிக்கப்பட்ட ஆறு எண்களில் (1-7-12-33-41-46) 5 எண்கள், வெற்றியடைந்த நபர்களுக்கு பொருந்தியுள்ளது.
அவர்களில் ஒருவரான, 69 வயதான ராபர்ட், கேரளாவைச் சேர்ந்தவர். அவர் இது குறித்து கூறுகையில், “நான் முதன்முறையாக டிராவில் பங்கேற்றேன். எனது அலுவலக நண்பர்களில் சிலர் விளையாடுகிறார்கள், எனவே இதை முயற்சிக்க முடிவு செய்தேன். நான் தனிமைப்படுத்தலில் இருந்தேன், எனவே எனது நண்பர் ஒருவர் அழைத்தபோது தான், நான் வென்றேன் என்பதை தெரிந்துகொண்டேன். இது எனக்கு ஒரு சிறந்த தருணம்” என்று கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் ராபர்ட், விரைவில் திருமணம் நடைபெறவிருக்கும் தனது மகளுக்கு பரிசுத்தொகையை வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு வெற்றியாளரான கேரளாவைச் சேர்ந்த, 35 வயதான முஹம்மது, காப்பீட்டுத் துறையில் (insurance industry) பணிபுரிகிறார். மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான முஹம்மது கூறுகையில், “மஹூஸிடமிருந்து நான் வெற்றி பெற்றதாக எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்ததைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டேன். எனக்குக் கிடைக்கும் பரிசுத்தொகையை வைத்து எனது சில கடன்களை அடைத்து என் குழந்தைகளின் எதிர்காலத்தில் முதலீடு செய்யவிருக்கிறேன்” என கூறியுள்ளார்.
ஆறு இந்திய வெற்றியாளர்களில், இப்ராஹிம் அப்துல் மட்டுமே கேரளாவைச் சேர்ந்தவர் அல்ல. தனது குடும்பத்தினருடன் உம் அல் குவைனில் வசிக்கும் 34 வயதான ஐ.டி நிபுணர் இப்ராஹிம் அப்துல் கூறுகையில், “இந்த வெற்றி அடுத்த சில மாதங்களில் எனக்கு வாழ்க்கையை மாற்றும். இந்த அற்புதமான பரிசு எனது குடும்பத்திற்கான அன்றாட செலவுகளை நீண்ட காலத்திற்கு ஈடுசெய்ய உதவும்” என தெரிவித்துள்ளார்.
மஹ்சூஸில் சேருவது எப்படி?
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் www.mahzooz.ae வழியாக பதிவுசெய்து பங்கேற்கலாம். இதில் பங்கேற்பதற்கு 35 திர்ஹம் கட்டணம் செலுத்த வேண்டும்.
மஹ்சூஸின் அடுத்த டிரா ஏப்ரல் 17 சனிக்கிழமை, ஐக்கிய அரபு அமீரக நேரப்படி இரவு 9 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பரிசான 50 மில்லியன் திர்ஹம் பணத்தொகையை இதுவரை யாரும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.