பெருநாள் தொழுகை நடைபெறும் நேரம் மற்றும் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளை அறிவித்த துபாய்..!!
துபாயில் கொரோனாவிற்கான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் இந்த வருடத்திற்கான நோன்பு பெருநாள் தொழுகையானது நடைபெறும் என்று துபாயில் உள்ள இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறை (IACAD) அறிவித்துள்ளது.
இது குறித்து IACAD தெரிவிக்கையில், துபாய் முழுவதும் உள்ள ஈத் முசல்லாக்கள் (தொழுகை நடத்தப்படும் திடல்) பெருநாள் தொழுகை நடைபெறவிருக்கும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு திறக்கப்படும் மற்றும் தொழுகை முடிந்தவுடன் உடனடியாக மூடப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை பெண்களுக்கான தொழுகை அறைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பெருநாள் தொழுகையானது துபாயில் அதிகாலை 5:52 மணிக்கு நடைபெறும் என்று IACAD கூறியுள்ளது. மேலும் ஈத் முசல்லாக்களின் நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் இடங்களில் கூட்டமாக ஒன்று கூடக் கூடாது என்றும் வழிபாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புனித ரமலான் மாதத்தில் தாராவீஹ் தொழுகையின் போது பின்பற்றப்படும் சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், எல்லா நேரங்களிலும் முக கவசம் அணிவது மற்றும் தனிப்பட்ட தொழுகை விரிப்புகளைக் கொண்டு வருதல் போன்ற அதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பெருநாள் தொழுகை நடத்தப்படும் என்று IACAD கூறியுள்ளது.
பெருநாள் தொழுகை நடத்தப்படும் இடங்களை IACAD இன் வலைத்தளத்திலோ (iacad.gov.in) அல்லது அதன் சமூக ஊடக தளங்களிலோ பொது மக்கள் தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.