UAE: தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கட்டிடத் தொழிலாளர்களுக்கு மறக்க முடியாத பரிசளித்த எடிசலாட்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பதினைந்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பரிசினை எடிசலாட் நிறுவனம் அளித்துள்ளது.
இதற்காக துபாயில் உள்ள நான்கு பணியாளர்கள் தங்குமிடங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட தொழிலாளர்கள் ஒரு சிறப்பு ப்ராஜெக்டில் பங்கேற்க வேண்டுமெனக் கூறி ஒரு சைட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு சென்ற அவர்களுக்கு மறைக்கப்பட்ட செய்தியைக் கொண்டிருக்கும் ஒரு மிகப் பெரிய டைல் கட்டமைப்பை (tile structure) ஒன்றாக இணைக்கும் படி கூறப்பட்டுள்ளது. அவர்கள் அதனை ஒன்றிணைக்கும் போது, ‘நீங்கள் இன்று உருவாக்கியுள்ளீர்கள். எனவே உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை நாளை உருவாக்குவோம் (You’ve built today, so let us build your child’s tomorrow)’ என்ற செய்தி அதில் இருந்துள்ளது.
அத்துடன் எடிசலாட் குழுவிடமிருந்து, “நீங்கள் இப்போது உருவாக்கிய டைல் கட்டமைப்பில் நீங்கள் காணக்கூடியது போல, உங்கள் எதிர்காலத்தில் ஒரு முக்கிய பங்கை குறிப்பாக, உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான முக்கிய பங்கை நாங்கள் உங்களுக்கு வழங்க விரும்புகிறோம். உங்கள் குழந்தைகளின் உயர் கல்விக்கு எடிசலாட் 25,000 திர்ஹம் உதவித்தொகை அளிக்கிறது” என தெரிவிக்கப்பட்டது.
எடிசலாட்டின் சர்ப்ரைஸான பரிசைப் பற்றி இறுதியாகக் கூறும் போது தொழிலாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் கண் கலங்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இது குறித்து தொழிலாளர்களில் ஒருவரான பாகிஸ்தானின் ராவல்பிண்டியைச் சேர்ந்த இரு பிள்ளைகளுக்கு தந்தையான 65 வயதான அப்துல் லத்தீப் அவான் கூறுகையில், “இந்த ரமலான் மாதத்தில் நான் செய்த பிரார்த்தனைகளுக்கு பதில் கிடைக்கும் என்றும், எடிசலாத்திடமிருந்து இவ்வளவு பெரிய வெகுமதியைப் பெறுவேன் என்றும் நான் நினைத்ததில்லை. நான் இந்த நாட்டில் என் வாழ்க்கையின் 38 ஆண்டுகளை செலவழித்துள்ளேன். இந்த நாடு எனக்கு இவ்வளவு பெரிய பரிசை வழங்கியுள்ளது. இதை என் வாழ்நாள் முழுவதும் போற்றுவேன்” என கூறியுள்ளார்.
பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் போலவே, 34 வயதான இந்தியாவைச் சேர்ந்த ஷேக் ரியாசுதீன் தனக்கும் தனது குடும்பத்திற்கும் எதிர்கால சேமிப்பிற்காக கடந்த 2018 இல் துபாய் வந்து பணிபுரிய ஆரம்பித்துள்ளார். தற்போது எடிசலாட் அவருக்கு உதவித்தொகை அளிப்பதாக கூறியவுடன் மிகவும் ஆனந்த அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், “இன்று எங்களுக்கு எடிசலாட் மிகப்பெரிய வெகுமதி அளித்துள்ளது. இந்த உதவித்தொகை மூலம் எனது வளர்ப்பு மகள் உயர் கல்வி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவள் உயர்கல்வி பெற்று சுயமாக நின்று உலகை எதிர்கொள்ள வேண்டும். நான் அவளுக்கு ஒரு நல்ல கல்வியை வழங்க முடியும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் எடிசலாட் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் குழுமத்தின் மூத்த துணைத் தலைவர் டாக்டர் அகமது பின் அலி தெரிவிக்கையில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்வதற்காக தங்கள் சொந்த நாடுகளை விட்டு வெளியேறி பணிபுரியும் இந்த தொழிலாளர்கள், நாட்டின் வெற்றிக் கதையின் ஒரு அங்கம் என்று எடிசலாத்தில் நாங்கள் நம்புகிறோம். சமுதாயத்திற்கும் பொருளாதாரத்திற்கும் அவர்கள் அளித்த பங்களிப்புகள் விலைமதிப்பற்றவை. அவர்களின் கடின உழைப்பு மற்றும் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம் தொழிலாளர் தினத்தை குறிப்பது எங்களுக்கு பொருத்தமானது” என குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 2.2 மில்லியன் Blue Collar தொழிலாளர்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.