குவைத்தில் முடிவுக்கு வரும் ஊரடங்கு..!! வணிக நடவடிக்கைகளுக்கு தொடரும் கட்டுப்பாடுகள்..!!
குவைத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, பகுதியளவு ஊரடங்கானது அமலில் இருந்து வருகின்றது. இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சர்களின் கூட்டத்தில், ஈத் அல் பித்ரின் முதல் நாளில் இருந்து ஊரடங்கு முடிவுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வணிக நடவடிக்கைகளுக்கு இரவு 8 மணியில் இருந்து மறுநாள் அதிகாலை 5 மணி வரை தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், கஃபேக்கள், மருந்தகங்கள், பராமரிப்பு சேவைகள் போன்றவற்றிற்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தாரிக் அல் முஸ்ரிம் தெரிவிக்கையில், தியேட்டர்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாகவும், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே தியேட்டருக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் உணவகங்களுக்குள் வாடிக்கையாளர் சேவை புரிய அனுமதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து குவைத்திற்கு வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரசு மற்றும் தனியார் துறைகளில் 60 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணியிடத்தில் இருந்து வேலை புரிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.