ஓமான்: மால்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை 50% திறனிலயே இயங்க வேண்டும்..!! அதிகாரிகள் எச்சரிக்கை..!!
ஓமானில் வணிக வளாகங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவை 50 சதவீத திறனிலேயே இயங்க வேண்டும் என்ற விதிமுறையானது இன்னும் நடைமுறையில் உள்ளது என்றும் இந்த முடிவுகளை மீறினால் கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதங்கள் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
உச்சக் குழு வழங்கிய முடிவுகளை மீறியதற்காக சமீபத்தில் ஒரு ஹோட்டல் நிறுவனத்தை மூட பாரம்பரிய மற்றும் சுற்றுலா அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், அனைத்து நிறுவனங்களும் இந்த விதிமுறையை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நாடு முழுவதும் இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை வணிகங்களை நடத்துவதற்கான தடையை நீக்கி, வணிக வளாகங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவை தொடர்ந்து 50% திறனிலேயே இயங்க வேண்டும் என உச்சக் குழு அறிவித்திருந்தது.
அத்துடன் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இப்போது மால்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.
மேலும் கண்காட்சிகள், திருமணங்கள் மற்றும் பிற சமூக செயல்பாடுகள் 30 சதவீத திறனில் அனுமதிக்கப்படும் என தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
எனவே, அனைத்து வணிக நிறுவனங்களும் உச்சக்குழு அறிவித்துள்ள முடிவைக் கடைபிடித்து கொரோனாவிற்கெதிரான போராட்டத்தில் அரசுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.