குவைத்தில் துவங்கிய 5 மணி நேர மதிய ஓய்வு இடைவேளை..!! தொழிலாளர்கள் மகிழ்ச்சி..!!
குவைத்தில் கோடை காலம் துவங்குவதால், மனிதவளத்திற்கான பொது ஆணையம் (PAM) ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை அனைத்து தொழிலாளர்களும் நேரடியாக சூரியனுக்குக் கீழ் மற்றும் வெயிலில் வேலை செய்வதைத் தடுக்கும் பொருட்டு காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் வேலை செய்ய தடை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்த நேரங்களும் தேதிகளும் 2015 அமைச்சக சட்டம் 535 இன் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் வெயில் அதிகமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டிருக்கும் நாட்களில் ஊழியர்கள் சூரியனுக்குக் கீழ் பணியாற்றுவதை தடைசெய்கின்றது.
தெரு துப்புரவாளர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் முதல் பைக்கில் டெலிவரி செய்யும் தொழிலாளர்கள் வரை என அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த முடிவு பொருந்தும்.
அந்த நேரத்தில் எந்தவொரு தொழிலாளர்களும் வேலை செய்வதைக் கண்டால் புகார்களை அனுப்புமாறு PAM பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அதன் மூலம் அந்த நிறுவனம் அல்லது முதலாளி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், தொழிலாளர் தொழிற்சங்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தொழிலாளர்கள் வெயிலில் வேலை செய்து உடல்நலம் பாதிக்கப்பட்ட மற்றும் சில நேரங்களில் அதிகமான சூரிய வெப்பத்தால் ஏற்பட்ட இறப்புகள் குறித்த பல வழக்குகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றன.
குவைத் அரசானது தொழிலாளர்களுக்கு வேலை செய்வதற்கான வெப்பநிலை வரம்பை நிர்ணயிக்கவில்லை. அதற்கு மாறாக அவர்கள் மூன்று மாதங்களுக்கு பகல் நேரத்தில் தொழிலாளர்கள் வேலை செய்வதைத் தடை செய்துள்ளது.
பொதுவாக கோடை காலங்களில் குவைத்தில் வெப்பநிலை 40 முதல் 50 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். சில நேரங்களில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், வெப்பநிலை 55 டிகிரி வரை செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.