சவூதி அரேபியா: வெளிநாட்டினரின் இகாமா, விசிட், எக்ஸிட் & ரீ என்ட்ரி விசாக்களுக்கான செல்லுபடி காலம் நீட்டிப்பு..!!
சவூதி அரேபியாவில் உள்ள பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் ஜூலை 31, 2021 வரை நாட்டிற்கு வெளியே சிக்கித் தவிக்கும் வெளிநாட்டினருக்கான குடியிருப்பு அனுமதி (இகாமா) செல்லுபடியை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
இந்த முடிவு விசிட் விசாக்கள் மற்றும் எக்ஸிட் மற்றும் ரீ என்ட்ரி விசாக்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
நிதி அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இந்த நீட்டிப்பு, கொரோனா தொற்றுநோயினை சமாளிக்க சவுதி அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளில் ஒன்றாகும்.
இது குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையிலும் நிதி மற்றும் பொருளாதார தாக்கங்களைத் தணிக்கவும் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டது.
இந்த நீட்டிப்பு தேசிய தகவல் மையத்தின் ஒத்துழைப்புடன் மின்னணு முறையில் தானாகவே மேற்கொள்ளப்படும் என்று இயக்குநரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்பொழுது அறிவிக்கப்பட்ட முடிவுகள்
- ஜூலை 31 வரை கொரோனா வைரஸின் பாதிப்பால் நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளில் உள்ள குடியிருப்பாளர்களுக்கான குடியிருப்பு அனுமதி, எக்ஸிட் மற்றும் ரீ என்ட்ரி விசாக்களின் செல்லுபடியை நீட்டித்தல்.
- கொரோனாவைரஸின் பாதிப்பால் நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் விசிட்டர்களுக்கான விசிட் விசாக்களின் செல்லுபடியை ஜூலை 31 வரை நீட்டித்தல்.
இந்த முடிவானது பிப்ரவரி 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட தொற்றுநோயின் விளைவாக சவூதிக்குள் நுழைய இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த 20 நாடுகளுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.