ADVERTISEMENT

எக்ஸ்போ 2020 துபாய் தளத்தில் மாஸ்க் அணிவது இனி கட்டாயமில்லை.. கோவிட்-19 விதிகளை புதுப்பித்த எக்ஸ்போ குழு..!!

Published: 28 Feb 2022, 6:21 AM |
Updated: 28 Feb 2022, 9:34 AM |
Posted By: admin

அமீரகத்தில் வெளிப்புற இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என்று தேசிய அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான உச்சக் குழு அறிவித்திருந்ததை தொடர்ந்து, துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ 2020 துபாய் தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என்று எக்ஸ்போ அமைப்பு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

எக்ஸ்போ அமைப்பு வெளியிட்டிருக்கும் புதுப்பிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளில், வெளிப்புற பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்தவில்லை என்றாலும், பொதுமக்கள் அதிகளவில் கூடக்கூடிய பிரபலமான பொழுதுபோக்கு இடங்களில் தொடர்ந்து பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக முகக்கவசம் அணிவதை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஆயினும் எக்ஸ்போ தளத்தின் உட்புற பகுதிகளான பெவிலியன் போன்ற இடங்களுக்குள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தற்போது வரையிலும், எக்ஸ்பொவிற்கு வரும் பார்வையாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை முன்னுரிமையாக கருதி எக்ஸ்போ 2020 துபாய் தளம் முழுவதும் கடுமையான கோவிட்-19 பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

மேலும் எக்ஸ்போ தளத்தை பார்வையிடுவதற்கு 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து எக்ஸ்போ பார்வையாளர்களும் தடுப்பூசி போட்டதற்கான ஆதாரம் அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR சோதனையின் எதிர்மறையான முடிவுகளைக் காட்ட வேண்டும் என்றும் எக்ஸ்போ குழு அறிவித்துள்ளது. ஆறு மாத காலத்திற்கு நடைபெறவுள்ள உள்ள இந்த எக்ஸ்போ 2020 கண்காட்சியானது வரும் மார்ச் மாதத்துடன் முடிவடையுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து எக்ஸ்போ 2020 தளத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 15 மில்லியனை கடக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.