இந்தியாவின் பட்ஜெட் கேரியரான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அபுதாபி விமான நிலையத்தில் தனது விமான சேவைகள் இயங்கும் டெர்மினலை மாற்றியுள்ளது. வரும் மார்ச் 10 ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
அபுதாபிக்கும் இந்தியாவிற்கும் இடையே இயக்கப்பட்டு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இதற்கு முன்னதாக அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 1 லிருந்தே இயக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா பரவலால் விதிக்கப்பட்டிருந்த விமான பயண தடையை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் சேவைகள் டெர்மினல் 2 க்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வரும் மார்ச் 10 ம் தேதி முதல் அபுதாபியில் இருந்து இந்தியா செல்லும் விமானங்கள் மீண்டும் டெர்மினல் 1-ல் இருந்து புறப்படும் என்று விமான நிலையம் அறிவித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களும் டெர்மினல் 1-ல் தரையிறங்கும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளது.
இந்தியாவில் இருந்து அபுதாபி வரும் பயணிகளில் கொரோனாவிற்கான தடுப்பூசி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் பயணத்திற்கு முன் PCR சோதனை மேற்கொள்ள வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.