அமீரகத்தில் புனித ரமலான் மாதம் துவங்க ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் இந்த மாதத்தில் உலகெங்கிலும் உள்ள ஏழைகளுக்கு ஒரு பில்லியன் உணவுகளை வழங்க ஐக்கிய அரபு அமீரகம் ஒரு முன்முயற்சியை மேற்கொள்ளும் என தற்பொழுது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் இன்று (வியாழன்) வெளியிட்ட ட்விட்டர் பதிவில் இந்த உணவு பிரச்சாரத்தை அறிவித்துள்ளார்.
ரமலான் மாதம் தொடங்கும் போது இந்த பிரச்சாரம் தொடங்கும் என்றும், ஒரு பில்லியன் உணவை வழங்குவதற்கான இலக்கை அடையும் வரை இந்த முயற்சி தொடரும் என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உலகம் முழுவதும் 800 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதிப்படுகின்றனர். எங்கள் மனிதாபிமானமும், மதமும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கூறுகிறது” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த பிரச்சாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஒரு பில்லியன் உணவுகள் மற்றும் ஒரு பில்லியன் மனிதாபிமான செய்திகளை உலகிற்கு வழங்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், “பசித்தவர்களுக்கு உணவளிப்பதே சிறந்த தொண்டு. உலகில் மற்றவர்களைப் பற்றி நினைப்பவர்களே சிறந்தவர்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த வருடங்களில் மேற்கொண்ட, ஐக்கிய அரபு அமீரகத்தின் ரமலான் பிரச்சாரங்களில் 10 மில்லியன் மற்றும் 100 மில்லியன் உணவுகள் வெற்றிகரமாக விநியோகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
هدفنا من الحملة إيصال مليار وجبة .. وايصال مليار رسالة انسانية من دولة الإمارات للعالم .. خير الصدقة إطعام الطعام … وخير الشعوب التي تفكر بغيرها .. وبلادنا محفوظة بالخير الذي نقدمه للمحتاجين .. موعدنا ١ رمضان بإذن الله ونسأل الله أن يتقبل منا ومنكم صالح الأعمال .. pic.twitter.com/nRYbPqWAbg
— HH Sheikh Mohammed (@HHShkMohd) March 10, 2022