100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் டெல்லியில் இருந்து தோஹா புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்ட சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.
கத்தார் ஏர்வேஸ் QR579 டெல்லியில் இருந்து தோஹாவிற்கு பயணித்து கொண்டிருக்கையில் விமானத்தின் கார்கோ பகுதியில் புகை பிடித்துள்ளது. இதன் காரணமாக விமானத்தில் பயணித்த பயணிகள் பெரிதும் அச்சம் கொண்டுள்ளனர். இதனையடுத்து விமானம் புகைந்ததன் விளைவாக உடனடியாக பாகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
இது குறித்து, கத்தார் ஏர்வேஸ் ஒரு அறிக்கையில், இந்த சம்பவம் தற்போது விசாரணையில் உள்ளது என்றும், பயணிகளை தோஹாவிற்கு கொண்டு செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
அதில் “மார்ச் 21 அன்று டெல்லியில் இருந்து தோஹாவிற்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் QR579 கார்கோ பகுதியில் புகைபிடித்ததைக் கண்டறிந்ததால் அவசரநிலையை அறிவித்து கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, விமானம் கராச்சியில் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், அங்கு பயணிகள் பாதுகாப்பாக இறங்கிய பிறகு அவசர சேவைகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கத்தார் ஏர்வேஸ் நிறுவனமும் பயணிகளின் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.