ADVERTISEMENT

உக்ரைன் நாட்டிற்கு உதவிக்கரம் நீட்டும் அமீரகம்.. 5 மில்லியன் டாலர் உதவியை அறிவித்த அமீரக அரசு..!!

Published: 3 Mar 2022, 11:01 AM |
Updated: 3 Mar 2022, 11:13 AM |
Posted By: admin

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரில் ரஷ்யாவின் தீவிர தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டின் பொதுமக்களுக்கு உதவும் விதமாக 5 மில்லியன் அமெரிக்கன் டாலர் மதிப்பிலான மனிதாபிமான உதவியை ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உடனடி உதவி மற்றும் உக்ரைனுக்கான பிராந்திய அகதிகள் மறுமொழி திட்டம் ஆகியவற்றிற்கு உதவும் வகையிலும் மற்றும் மோதல் அமைப்புகளில் மனிதாபிமான ஒற்றுமைக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கியத்துவத்தின் பிரதிபலிப்பாகவும் இந்த பங்களிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமீரக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் பிப்ரவரி 28 அன்று உக்ரைனில் மனிதாபிமான நிலைமை குறித்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தின் போது மேற்கோள்காட்டப்பட்டதை போன்று உக்ரைன் நாட்டு குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், மனிதாபிமான உதவிகளை செய்யும் ஏஜென்சிகளுக்கு தடையின்றி அணுகலை வழங்குதல் மற்றும் பாரபட்சம் அல்லது தடைகள் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேற முயல்பவர்களுக்கு பாதுகாப்பான வழியை ஏற்படுத்தி தருதல் போன்றவற்றில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் அமீரகம் அடிக்கோடிட்டு காட்டியுள்ளது.

ADVERTISEMENT

உக்ரைனில் அத்தியாவசிய சேவைகளில் இடையூறுகள் காரணமாக அவதிப்படும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்கான வேண்டுகோளை ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மார்ச் 1, 2022 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.