உக்ரைன்-ரஷ்யா ராணுவ மோதலால் உலகளவில் உயர்ந்த கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது மார்ச் 2022க்கான பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 11 சதவீதம் வரை ஐக்கிய அரபு அமீரகம் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 2015 இல் எண்ணெய் விலையை தாராளமயமாக்கிய பிறகு முதல் முறையாக அமீரகத்தில் பெட்ரோல் விலை, இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா ராணுவம் தாக்குதலை நடத்தியதை அடுத்து கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 105 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. இந்த விலையானது பின்னர் ஒரு பீப்பாய்க்கு $ 100 என்ற அளவில் அமைந்தன. ஐக்கிய அரபு அமீரகத்தில் திங்களன்று இரவு 7 மணி நேரப்படி, ப்ரெண்ட் (Brent) ஒரு பீப்பாய் $100.81 ஆகவும், WTI ஒரு பீப்பாய்க்கு $95.04 ஆகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.
இதனையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில், 2022 மார்ச் மாதத்திற்கான Super 98 எரிபொருள் விலை லிட்டருக்கு 9.9 சதவீதம் அதிகரித்து 3.23 திர்ஹம் ஆகவும், ஸ்பெஷல் 95 11 சதவீதம் அதிகரித்து 3.12 திர்ஹம் ஆகவும், E-plus 91 விலை 11 சதவீதம் உயர்ந்து 3.05 திர்ஹம் ஆகவும் உயர்ந்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் கொரோனா பரவ ஆரம்பித்ததற்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் எரிபொருள் விலைகள் முடக்கப்பட்டு ஒரே விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் பின்னர் உலகளாவிய எண்ணெய் விலைகளுக்கு ஏற்ப கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மீண்டும் சரிசெய்யப்பட்டது.
செஞ்சுரி ஃபைனான்சியலின் தலைமை முதலீட்டு அதிகாரி விஜய் வலேச்சா, வார வேலை நாட்களின் முதல் நாளான திங்களன்று ரஷ்யா-உக்ரைன் இடையே நிலவி வரும் போரின் காரணமாகவே கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.