ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை பிறை காணப்பட்டதை தொடர்ந்து, நாளை ஏப்ரல் 2 சனிக்கிழமை புனித ரமலான் மாதத்தின் முதல் நாளாக கடைபிடிக்கப்படும் என்று அமீரக அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து, அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள், மற்ற அரபு நாடுகள் மற்றும் உலக நாடுகளின் முஸ்லிம் மக்கள் ஆகியோருக்கு அமீரக தலைவர்கள் தங்களின் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், புனித ரமலான் மாதத்தின் வருகையை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அனைத்து அரபு மற்றும் முஸ்லீம் நாடுகளின் மக்களுக்கு தனது வாழ்த்துகளை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “கடவுள் எங்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையுடன் ஆசீர்வதிக்கட்டும். கடவுள் இந்த ரமலான் மாதத்தை உலகம் மற்றும் அனைத்து முஸ்லிம்களுக்கும் நன்மை பயக்கும் மாதமாகவும் ஆசிர்வதிக்கப்பட்ட மாதமாகவும் மாற்றினார்” என்று கூறியுள்ளார்.
அதே போன்று அபுதாபியின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் துணைத் தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களும், அமீரகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு புனித ரமலான் மாதத்தின் வருகையை முன்னிட்டு மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
அபுதாபி பட்டத்து இளவரசர் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “எங்கள் அன்புக்குரிய நாட்டிற்கும், எங்கும் உள்ள மக்களுக்கும் கடவுள் தனது ஆசீர்வாதத்தையும் கருணையையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று நாங்கள் மனதாரப் பிரார்த்திக்கிறோம்” என்று கூறியுள்ளார்.