துபாயில் நாளை நடத்தப்படவுள்ள பிரம்மாண்ட ஏர் ஷோ…!! துபாய்வாசிகளே.. மிஸ் பண்ணிடாதீங்க..!!
துபாய்வாசிகளுக்கு ஒரு அற்புதமான மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவத்தைத் தரும் வகையில் துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறையானது பிரம்மாண்ட ஏர் ஷோவை நாளை நடத்தவிருக்கின்றது. நாளை திங்கள்கிழமை (ஜூன் 20) மாலை 6.20 மணி முதல் நடைபெறவிருக்கும் இந்த ஏர் ஷோ நகரின் முக்கிய சுற்றுலா பகுதிகளில் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறையின் படி, ஐக்கிய அரபு அமீரக ஆயுதப்படையின் மிகவும் திறமையான ஏரோபாட்டிக்ஸ் குழுவான Fursan Al Emarat, முன்னெப்போதும் கண்டிராத வகையில் பிரம்மாண்டமாக ஏர்ஷோவினை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. புர்ஜ் கலீஃபா, அய்ன் துபாய், பாம் ஜுமைரா, புர்ஜ் அல் அரப், கைட் பீச், துபாய் ஃபிரேம் மற்றும் நகரின் சமீபத்திய ஈர்ப்பு பகுதிகள், மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர் உள்ளிட்ட துபாயின் முக்கிய அடையாளங்கள் இருக்கும் பகுதிகளில் இந்த ஜெட் விமானங்கள் கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுமையான அனுபவங்களின் மூலம் மக்களை ஒன்றிணைக்க நகரத்தின் முக்கிய கூட்டாளர்களுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வண்ணமயமான நிகழ்ச்சியினை குடியிருப்பாளர்கள் அனைவரும் கண்டு களிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.