அமீரக செய்திகள்

UAE: மதுரையில் இருந்து துபாய்க்கு வரவிருந்த விமானத்தில் 2வது நாளாக தொழில்நுட்ப கோளாறு.. பயணிகள் கடும் அவதி..!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரையில் இருந்து துபாய்க்கு வரவிருந்த SPICEJET விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

மதுரை விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4.30 மணிக்கு துபாய் வர தயார் நிலையில் இருந்தது SPICEJET விமானம். அதில் 169 பயணிகள் முன்பதிவு செய்து இருந்தனர். விமானம் புறப்புடம் சமயத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பயணிகள் அனைவரும் விமான நிலைய வளாகத்தில் காத்திருந்தனர்.

அதன் பின்னர் சென்னையிலிருந்து தொழில்நுட்ப ஆய்வாளர்கள் வரவழைக்கப்பட்டு விமானத்தை சரிசெய்ய முயன்றனர். இருப்பினும் இரவு 9.30 மணிவரை விமானத்தின் கோளாறை சரிசெய்ய முடியாததால் பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் துபாய் செல்ல இருந்த பயணிகள் விமான நிறுவனத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த விமான நிறுவனம் இன்று (திங்கட்கிழமை) விமானம் புறப்படும் என்றும், பயணம் செய்ய விரும்பாதவர்களுக்கு பணம் திரும்ப கொடுக்கப்படும் என்றும், பயணம் செய்ய விரும்புவோர்கள் விடுதியில் தங்க வைக்கப்படுவர் எனவும் தெரிவித்தனர்.

இதே தனியார் விமானம் மதுரையிலிருந்து நேற்று முன்தினம் சுமார் 7 மணிநேரம் தாமதமாக துபாய் புறப்பட்டு சென்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

மேலும் அன்றைய தினம் விமானத்தில் சென்ற பயணிகள் சிலர், அவர்களது உடைமைகளை மதுரை விமான நிலையத்திலேயே வைத்துவிட்டு சென்றுள்ளனர். துபாய்க்கு விமானம் வந்தவுடன் பயணிகள் தங்களது உடமைகள் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து விமான நிறுவனத்திடம் கேட்டபோது நேற்று மதுரையிலிருந்து துபாய் வரும் விமானத்தில் உடமைகளை கொண்டுவந்து வருவதாக விமான நிறுவனத்தினர் உறுதி அளித்தனர்.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டதால் துபாய்க்கு வந்த பயணிகள் அவதிப்படுகின்றனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!