அமீரகத்தின் கடலோரப் பகுதிகளில் மிதமான காற்று வீசும் என்று அறிவிப்பு! இலேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தகவல்…
அமீரகத்தில் எதிர்வரும் நாட்களில் வானிலை மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மிதமான காற்று வீசும் என்றும் அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. வானிலை அறிக்கையின்படி, காலநிலை மாற்றம் காரணமாக நாட்டின் வடக்கு கடலோரப் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு சில பகுதிகளில் வெப்பநிலை படிப்படியாக உயரும் என்றும், அதன்படி அபுதாபி மற்றும் துபாயில் வெப்பநிலை 25ºC ஆக அதிகரிக்கும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அத்துடன் அதிகபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் NCM கூறியுள்ளது.
இருப்பினும், மலைப்பகுதிகளில் வெப்பநிலை 5ºC ஆக இருக்கும் என்றும், அதுபோல மேகமூட்டமான வானிலையின் போது, அபுதாபி மற்றும் துபாயில் 17ºC மற்றும் 19ºC வெப்பநிலை பதிவாகும் என்றும் NCM குறிப்பிட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, கடற்பரப்பில் அவ்வப்போது லேசான காற்று வீசும் எனவும், அபுதாபி மற்றும் துபாயில் ஈரப்பதத்தின் நிலைகள் 35 முதல் 75 சதவீதம் வரை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், அமீரகத்தின் மேற்கு எல்லைகளில் பனிமூட்டம் உருவாகும் என்றும், அதனால் வெள்ளிக்கிழமை இரவு மற்றும் சனிக்கிழமை காலை ஆகிய பொழுதுகளில் காற்று ஈரப்பதத்துடன் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை முன்னறிவிப்பின்படி, அரேபிய வளைகுடாவில் கடல் சீற்றமின்றி அமைதியாகவும், ஓமன் கடல் ஓரளவு சீற்றத்துடன் இருக்கும் என தேசிய வானிலை மையம் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.