அமீரக செய்திகள்

துபாய்: புதிய சாதனை படைத்த குளோபல் வில்லேஜ்..!! அடுத்த சீசன் எப்போது…??

துபாய் குளோபல் வில்லேஜின் தற்பொழுது முடிவடைந்துள்ள 27வது சீசன், குளோபல் வில்லேஜ் வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை வரவேற்று சாதனை படைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமீரகத்தின் பிரபலமான பொழுதுபோக்கு இடமான குளோபல் வில்லேஜைக் காண்பதற்கு ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து துபாய் ஹோல்டிங் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் CEO பெர்னாண்டோ எய்ரோவா அவர்கள் பேசுகையில், இந்தப் புதிய சாதனை 188 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற குளோபல் வில்லேஜை பிராந்தியத்தின் நம்பர் ஒன் பொழுதுபோக்கு அம்சமாகவும், உலகின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு இடமாகவும் நிலைநிறுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், துபாயை பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாவுக்கான உலகளாவிய மையமாக நிலைநிறுத்துவதற்கு தொடர்ந்து அவர்கள் பங்காற்றி வருவதால், அவர்களின் விலைமதிப்பற்ற கூட்டாளர்களுக்கும் குளோபல் வில்லேஜ் குழுவிற்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டில் குளோபல் வில்லேஜின் 27வது சீசன் துவங்கப்பட்டதில் இருந்து சுமார் 27 பெவிலியன்களில் 90க்கும் மேற்பட்ட கலாச்சார நிகழ்வுகள் மற்றும் 40க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 400 கலைஞர்களின் 40,000 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. அதேவேளை, 175 க்கும் மேற்பட்ட ரைடுகளை பார்வையாளர்கள் அனுபவித்து மகிழ்ந்தனர். அத்துடன் 3,250 க்கும் மேற்பட்ட விற்பனையகங்களில் ஷாப்பிங், உணவு மற்றும் 77 தனித்துவமான வானவேடிக்கை காட்சிகளை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், குளோபல் வில்லேஜ் விரைவில் சீசன் 28 இல் அடியெடுத்து வைக்கும் என்று அவர் கூறியுள்ளார். அடுத்த சீசனின் தொடக்க தேதி இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிவிக்கப்படும் என்றாலும், அக்டோபர் மாதம் மீண்டும் வரும் என்று ட்வீட் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!