UAE: 1,527 வாகனங்களை அதிரடியாக பறிமுதல் செய்த ஷார்ஜா முனிசிபாலிட்டி..!! அபராதம் செலுத்தினாலே வாகனம் திரும்ப பெற முடியும் எனவும் தகவல்..!!
ஷார்ஜா முனிசிபாலிட்டி நகரத்தின் அழகியல் தோற்றத்தை கெடுக்கும் வகையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்கும் கைவிடப்பட்ட மற்றும் தூசியடைந்த 1,527 வாகனங்களை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது. அதாவது வாகனங்கள் முறையான பராமரிப்பின்றி சுத்தம் செய்யப்படாமல் சாலையில் இருப்பதால் நகரின் அழகியல் தோற்றம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதனை தடுக்கும் பொருட்டு, மூன்று மாத காலப்பகுதியில் ஷார்ஜாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்ட 25,294 ஆய்வுகளின் போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தகவல் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ஷார்ஜா முனிசிபாலிட்டியின் கட்டுப்பாட்டு மற்றும் ஆய்வுத் துறையின் செயல் இயக்குநர் கலீஃபா புகானிம் அல் சுவைதி அவர்கள் கூறுகையில், எமிரேட்டின் பொதுவான தோற்றத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் எதிர்மறை நடத்தைகளை கண்காணிக்க முனிசிபாலிட்டி இந்த ஆய்வுகளை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், பறிமுதல் செய்யப்பட்ட 1,461 வாகனங்களை அவற்றின் உரிமையாளர்கள் அபராதம் செலுத்திய பின்னரே விடுவித்துள்ளது. அத்துடன் மீண்டும் இதுபோன்ற மீறல்களை மீண்டும் செய்யக்கூடாது என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில், சமூகத்தின் ஆதரவு மற்றும் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் தொடர்ந்து பணியாற்றுவதாக அவர் தெரிவித்துள்ளார். பெரும்பாலும் கைவிடப்பட்ட வாகனங்கள், தடைசெய்யப்பட்ட பொருட்களை கைப்பற்றுதல், தனிநபர், சமூகம் மற்றும் ஒட்டுமொத்த தோற்றத்தை எதிர்மறையாக பாதிக்கும் நடத்தைகளை கட்டுப்படுத்துவதையும் இந்த ஆய்வுகள் நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.