வளைகுடா செய்திகள்

ரியாத்தில் பாலத்தின் தடையை உடைத்துக்கொண்டு கீழே விழுந்த கார்..!! சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ..!!

சவுதியின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் ஃபஹ்த் சாலையில் வாகனம் ஒன்று தடையை உடைத்து பாலத்தில் இருந்து கீழே உள்ள மற்றொரு கார் மீது விழுந்து கடுமையான விபத்துக்குள்ளாகிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மேலும், இந்த மோசமான விபத்துக் காட்சிகள் அடங்கிய வீடியோ, காட்டுத்தீ போல சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ரியாத்தில் உள்ள அனஸ் பின் மாலிக் இண்டர்செக்சன் சுரங்கப்பாதையில் நடந்த இச்சம்பவத்தின் விளைவாக போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

விபத்து குறித்த தகவல்களின் படி, அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று பாலத்தின் மேற்புறத்தில் உள்ள தடையை உடைத்து கீழே இருந்த கார் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தை காட்டும் வீடியோ கிளிப்பில் விபத்தினால் ஏற்பட்ட சேதம் மற்றும் விபத்தின் விளைவாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைக் காணமுடிகிறது.

அதுமட்டுமின்றி, சமூக ஊடகங்களில் இந்த விபத்துக்கு எதிரான கண்டனம் வலுத்து வருகிறது. குறிப்பாக, சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதன் ஆபத்துகளை இணையவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டில் இதுபோன்ற விபத்துகளைக் குறைக்க கடுமையான விதிமுறைகள் மற்றும் சட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், வேகம் மற்றும் வாகனம் ஓட்டும் போது மொபைல் போன்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட அலட்சியமான நடத்தைகளால் தொடர்ந்து உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சவுதி போக்குவரத்து துறை, சாலைகளில் அனைத்து ஓட்டுநர்களும் போக்குவரத்து விதிமுறைகளை, குறிப்பாக சந்திப்புகளில் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும், அதிக வேகம் மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவதன் கடுமையான விளைவுகளையும் பற்றி எணசரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறினால் 300 முதல் 500 ரியால் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!