UAE: தனக்குள் 400 வருட ‘ஜின்’ இருப்பதாக உருட்டிய 7 ஆசாமிகள்.. கொத்தாக தூக்கி சிறையில் அடைத்த காவல்துறை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏழு பேர் கொண்ட கும்பல் சூனியம் செய்ததற்காகவும், மற்றவர்களை ஏமாற்றியதற்காகவும் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் 50,000 திர்ஹம் அபராதத்தை செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் குற்றங்கள் மற்றும் தண்டனைகள் சட்டத்தை வெளியிடும் 2021 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணை-சட்ட எண். 31 இன் படி, சூனியம் மற்றும் வஞ்சகம் ஆகியவை கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்நிலையில் ஏழு பேர் கொண்ட ஆசாமிகள் தங்களை சூனியக்காரர்கள் என்று கூறியதுடன் மக்களை ஏமாற்றியும் உள்ளனர். இது குறித்து சூனியக்கார கும்பலின் மோசடிக்கு பலியாகிய ஒரு நபர் புகாரளித்ததாக அமீரக பப்ளிக் பிராசிக்யூஷன் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அவர்கள் ஏழு பெரும் சூனியம் செய்தல், ஏமாற்றுதல் மற்றும் சூனியத்திற்குப் பயன்படுத்தப்படும் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், தனக்குள் 400 ஆண்டுகள் பழமையான ‘ஜின்’ இருப்பதாகக் கூறியதாகவும், மீதமுள்ள குற்றவாளிகளும் தங்களுக்குள் மக்களைக் குணப்படுத்தும் அதேபோன்ற ஒரு ‘ஜின்’ இருப்பதாகக் கூறியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு 6 மாத கால சிறை தண்டனையும் 50,000 திர்ஹம்ஸ் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க சூனியம் தொடர்பான சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.