அமீரக செய்திகள்

UAE: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! வேலை, வங்கி குறித்த போலியான செய்திகளை நம்பி மோசடிக்கு ஆளாகாதீர்கள்.. அமைச்சகம் வலியுறுத்தல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக ஊடகங்களில் சுற்றி வரும் மோசடி வேலை விளம்பரம் குறித்து ஷார்ஜா காவல்துறை குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளது. அதில் ஷார்ஜா காவல்துறையில் வேலைவாயப்பு இருப்பதாக கூறி போலியான தகவல்களுடன் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படும் அந்த குறிப்பிட்ட மோசடி வேலை விளம்பரத்தில், அனைத்து நாட்டினருக்கும் வேலைவாய்ப்பில் கலந்து கொள்ள நுழைவு அனுமதி உண்டு என்று குறிப்பிட்டுள்ளதையும் ஷார்ஜா காவல்துறை மறுத்துள்ளது.

ஆகவே, குடியிருப்பாளர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து வெளியிடப்படும் வேலை விளம்பரங்களை மட்டுமே கடைபிடிக்குமாறு ஷார்ஜா காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் போலியான விளம்பரங்கள் மற்றும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் காவல்துறை அதிகாரிகள் குடியிருப்பாளர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதேவேளை, மனித வளங்கள் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MOHRE) அதன் அதிகாரப்பூர்வ லோகோவைப் போலவே, போலியான லோகோவைக் கொண்டு வெளியான செய்தி குறித்தும் இன்று (ஜூலை 13) தனது ட்விட்டர் பக்கத்தில் குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளது.

இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, போலி ஆவணத்தில் “Legal notice from Ministry of Interior” என்ற தலைப்புடன் “தனிநபர்களின் வங்கி விவரங்களை வழங்கவும். இல்லையெனில் கணக்கு முடக்கப்படும்” என்று வாடிக்கையாளர்களிடம் கேட்கப்பட்டுள்ளது.

இது போன்ற போலியான செய்திகள் ஏற்கனவே பலமுறை நடந்த மோசடிகளில் பயன்படுத்தப்பட்டவை என்றும், இருப்பினும் இது தொடர்ந்து கொண்டே இருப்பதால் இதிலிருந்து குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பொதுவாக, மோசடி கும்பல்கள் மக்களின் தனிப்பட்ட தரவுகளை சேமிப்பதற்கும், அவர்களின் வங்கிக் கணக்குகளை அணுகுவதற்கும் இது போன்ற தந்திரச் செயல்களைச் செய்வதுண்டு. அவ்வாறான சூழ்நிலைகளில், இத்தகைய போலியான செய்தியைப் புறக்கணித்து மோசடி குறித்து புகாரளிப்பது பொதுமக்களின் பொறுப்பு என்பதையும் அமைச்சகம் நினைவூட்டியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!