அமீரக செய்திகள்

UAE: தாறுமாறாக வாகனத்தை முந்திச் சென்ற டிரைவர்: வாகனத்தை பறிமுதல் செய்து 50,000 திர்ஹம் அபராதம் விதித்த துபாய் போலீஸ்!!

சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தை ஆபத்தான முறையில் முந்திச் சென்ற வாகன ஓட்டியை கைது செய்து 50,000 திர்ஹம் அபராதம் விதித்ததாக துபாய் காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

அத்துடன் எமிரேட்டில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஷேக் முகமது பின் சையத் சாலையில், கைதான வாகன ஓட்டி எப்படி பொறுப்பற்ற முறையில் ஓட்டிச் சென்றார் என்பதைக் காட்டும் வீடியோ ஒன்றையும் காவல்துறை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், டிரைவர் வலப்புறத்திலிருந்து முந்திச் செல்வதற்காக, ஆபத்தான முறையில் வாகனத்தை ஒட்டியவாறே ஓட்டிச் செல்வதைக் காணலாம். அதுமட்டுமின்றி, அவ்வாறு முந்திச் சென்ற பின்னரும், பல முறை பிரேக் பிடித்து மற்றொரு ஆபத்தான செயலில் ஈடுபட்டிருப்பதையும் வீடியோவில் காணமுடிகிறது.

இச்சம்பவம் குறித்து துபாய் காவல்துறையின் போக்குவரத்து பொதுத் துறையின் இயக்குநர் மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய் அவர்கள் பேசிய போது, சம்பவத்தின் போது ரோந்து அதிகாரிகள் அவசரமாக செயல்படவில்லை என்றும், ஓட்டுநரின் செயல்களை கவனமாக கண்காணித்து பதிவு செய்ததுடன் அவரை பாதுகாப்பாக நிறுத்த சரியான தருணத்தை தேர்வு செய்தனர் என்றும் கூறினார்.


மேலும், போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை பயனாளிகளின் உரிமைகளை மீறும் நடத்தைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போது, கைது செய்யப்பட்ட ஓட்டுநரின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அவரது டிரைவிங் லைசென்சில் 23 பிளாக் பாயிண்ட்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

துபாயில் அமுல்படுத்தப்பட்ட சமீபத்திய சட்டத்தை  காவல்துறை இந்த வழக்கில் செயல்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைமுறைக்கு வந்த சட்டத்தின் படி, அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டினால், வாகன ஓட்டிகள் 50,000 திர்ஹம்களை செலுத்த வேண்டியிருக்கும்.

அதுபோல, அனுமதியின்றி சாலைகளில் பந்தயத்தில் ஈடுபடுவதற்கு 100,000 திர்ஹம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், மேஜர் ஜெனரல் அல் மஸ்ரூய், யாரும் சட்டத்தை விட மேலானவர்கள் அல்ல என்று வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!