அமீரக செய்திகள்

அமீரகத்தில் இன்றுடன் முடியும் காலக்கெடு..!! ILOE திட்டத்தில் பதிவு செய்யாத ஊழியர்கள் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்கள் ஒரு பார்வை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவளம் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MoHRE) கடந்த சில மாதங்களாக வேலை இழப்பு காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யாத ஊழியர்களை விரைந்து பதிவு செய்யுமாறு வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடியவுள்ளது.

மனிதவள அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி, வேலையிழப்பு காப்பீட்டுத் திட்டத்தில் குழு சேரத் தவறிய ஊழியர்கள் அபராதம் செலுத்த வேண்டியிருப்பதுடன் மற்ற சில சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஏற்கனவே எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

அந்த வகையில், நாளை முதல் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யாத ஊழியர்கள் எதிர்கொள்ள சிக்கல்கள், திட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்குகள் என நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் பற்றி இங்கே தெளிவாகப் பார்க்கலாம்.

அபராதம்:

— MoHRE வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, காலக்கெடுவிற்கு முன் திட்டத்தில் பதிவு செய்யாத தகுதியுள்ள ஊழியர்களுக்கு 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

— அதேபோல், சந்தா செலுத்திய தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக பிரீமியம் செலுத்தாத ஊழியர்களிடமிருந்து 200 திர்ஹம் அபராதம் வசூலிக்கப்படும்.

— குறிப்பாக, இத்திட்டத்தின் காப்பீட்டுப் பலன்களை மற்றவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் ஊழியர்கள் 20,000 திர்ஹம்கள் அபராதம் செலுத்த வேண்டும்.

புதிதாக பணி அனுமதி பெற முடியாது

ILOE காப்பீட்டுத் திட்டத்தில் நிலுவையில் உள்ள அனைத்து அபராதங்களையும் செலுத்தத் தவறிய ஊழியர்களால் அமீரகத்தில் புதிய பணி அனுமதிக்கு விண்ணப்பிக்கவோ அல்லது பெறவோ முடியாது.

சம்பளப் பிடித்தம்

முக்கியமாக இத் திட்டத்தில் பதிவு செய்யாத ஊழியர்கள்தான் அபராதம் மற்றும் தண்டனைகளை எதிர்கொள்வார்கள் என்பதனையும் இதனால் முதலாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதனையும் நினைவில் கொள்வது அவசியம்.

ஏனெனில், அமீரகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியரால் செலுத்தப்படாத அபராதங்கள் அந்த ஊழியர்களின் சம்பளம் அல்லது சேவையின் இறுதிப் பலன்களில் இருந்துதான் கழிக்கப்படும்.

விதிவிலக்குகள்:

இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு சில ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதில் முதலீட்டாளர்கள், வணிக உரிமையாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், ஓய்வூதியம் பெற்று புதிய முதலாளியுடன் சேர்ந்த ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் அடங்குவர்.

மேற்கூறப்பட்ட வகையினரைத் தவிர, அமீரகத்தில் உள்ள அனைத்து மத்திய மற்றும் தனியார் ஊழியர்களும் திட்டத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ILOE திட்டங்கள் மற்றும் அவற்றின் நன்மைகள்:

இந்த ILOE திட்டங்கள் இரண்டு வகைகளாக உள்ளன. ஒரு ஊழியர் மூன்று மாதங்கள் வரை இத்திட்டத்தின் நன்மைகளைப் பெறலாம்.

வகை A: அடிப்படை சம்பளம் 16,000 திர்ஹம் அல்லது அதற்கும் குறைவான சம்பளம் பெறும் ஊழியர்கள்

  • செலவு: மாதத்திற்கு VAT வரியுடன் 5 திர்ஹம்
  • இழப்பீட்டு நன்மை: அடிப்படை சம்பளத்தில் 60% என்ற அடிப்படையில் மாதம் 10,000 திர்ஹம் வரை இழப்பீடு வழங்கப்படும்.

வகை B: அடிப்படை சம்பளம் 16,000 திர்ஹம்களுக்கு மேல் ஈட்டும் ஊழியர்கள்

  • செலவு: மாதத்திற்கு VATயுடன் 10 திர்ஹம்
  • இழப்பீட்டு பலன்: அடிப்படை சம்பளத்தில் 60 என்ற கணக்கில் மாதம் 20,000 திர்ஹம் வரை இழப்பீடுப் பெறலாம்.

இதற்கிடையில், காப்பீட்டாளர் மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே புதிய வேலையில் சேர்ந்து விட்டாலோ அல்லது நாட்டை விட்டு வெளியேறினாலோ வேலையின்மை காப்பீட்டு திட்டத்தின் நன்மைகள் நிறுத்தப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!