அமீரக செய்திகள்

அமீரகத்தில் தொடரும் சோகம்.. அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த 17 வயது இந்திய சிறுவன் பலி!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அஜ்மானில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த 17 வயது சிறுவன், தான் வசித்து வந்த குடியிருப்புக் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது உடல் திங்கள்கிழமை (அக்டோபர் 23) அதிகாலை அஜ்மான் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் சிறுவனின் மரணம் குறித்து அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டதாக  அதிகாரிகள் கூறியுள்ளனர். உயிரிழந்த நபரின் தந்தை தொழில்முனைவோராகவும் அவரது தாயார் துபாயில் செவிலியராகவும் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

அஜ்மான் குளோபல் இந்தியன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன், ஞாயிற்றுக்கிழமை மாலை தனது குடும்பத்துடன் தேவாலயத்திற்குச் சென்று வந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அவர் எப்படி விழுந்து இறந்தார் என்பது பற்றிய விவரம் ஏதும் வெளியாகவில்லை. மேலும், இறந்தவரின் உடலை குடும்பத்தினர் இந்தியாவுக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளதாக சமூக சேவகர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, அதற்கான சம்பிரதாயங்கள் மற்றும் ஆவணங்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அது முடிந்ததும், உடல் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படும், அங்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் சமூக சேவகர் அஷ்ரப் தாமரசேரி கூறியுள்ளார்.

ஏற்கனவே, இந்த ஆண்டின் தொடக்கத்தில், துபாயில் 12 வயது சிறுமி தனது தாய் வேலைக்குச் சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு, அல் தாவுன் பகுதியில் உள்ள ஏழு மாடி கார் பார்க்கிங்கின் மேல் தளத்தில் ஸ்கேட்போர்டிங் செய்யும் போது 16 வயது சிறுவன் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

அமீரகத்தில் இது போன்ற துயர சம்பவங்கள் அவ்வப்போது ஏற்படுவதைத் தொடர்ந்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் மீது கவனம் செலுத்தி பார்த்துக்கொள்ளுமாறும் விழிப்புணர்வு அறிவிப்பை ஏற்கெனவே வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!