அமீரக செய்திகள்

இன்னும் 100 நாட்களில் திறக்கப்படவிருக்கும் அபுதாபியின் முதல் இந்து கற்கோவில்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் நீண்ட நாட்களாக கட்டப்பட்டு வரும் முதல் பாரம்பரிய இந்து கல் கோவில் இன்னும் நூறு நாட்களில் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவில் கட்டுமானம் BAPS இந்து மந்திர் அமைப்பால் முதன்முதலில் 2019 டிசம்பரில் அபுதாபியில் தொடங்கப்பட்டது, இது இப்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. எனவே, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்து கோவில் பிப்ரவரி 14, 2024 அன்று பிரம்மாண்டமாக திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், BAPS சுவாமிநாராயண் சன்ஸ்தா அமைப்பின் உலகளாவிய ஒருங்கிணைப்பாளரான சத்குரு பூஜ்ய ஈஸ்வர்சரண் சுவாமி அவர்கள், கம்பீரமாக எழுந்து நிற்கும் கோபுரங்கள் மீது மலர் இதழ்களை பொழியும் விழாவை நடத்தியிருந்தார்.

மேலே இருந்து பார்ப்பதற்கு கோவிலின் முழு வளாகம், பார்க்கிங் மற்றும் சிறிய கோபுரங்களைக் கொண்ட முக்கிய உச்சம், அனைத்தும்  கம்பீரமாகவும், அற்புதமாகவும் தெரிகிறது என்று ஈஸ்வர்சரண் ஸ்வாமி கூறியுள்ளார்.

மேலும், கைவினைஞர்கள், தன்னார்வத் தொண்டர்கள், பக்தர்கள் மற்றும் ஈஸ்வர்சரண் சுவாமிகள் என அபுதாபியின் முதல் இந்து கோவிலின் கம்பீரமான மற்றும் அற்புதமான முன்னேற்றத்தைக் கண்ட அனைவரும் பெருமையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் பிரம்மவிஹாரிதாஸ் சுவாமி, துபாய்-அபுதாபி நெடுஞ்சாலையில் உள்ள அபு முரீகாவில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் இளஞ்சிவப்பு மணற்கற்கள் மற்றும் வெள்ளை பளிங்குக் கற்களால் எழுப்பப்பட்டுள்ள கோவில் குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.

குறிப்பாக, கைவினைஞர்களின் சிற்பக் கலைகளானது, ராமாயணம், மகாபாரதம் மற்றும் இந்து வேதங்களில் இருந்து மற்ற கதைகளில் இருந்து முக்கிய தருணங்களை சித்தரிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளது.

கோவில் கட்டுமானத்தில் நடைபெற்று வரும் பணிகளை மதிப்பாய்வு செய்த ஈஸ்வர்சரண் ஸ்வாமி, “கடவுள் மற்றும் எங்கள் குருக்கள் மற்றும் அனைத்து அறிவொளி பெற்ற ஆன்மீக குருமார்களின் ஆசீர்வாதங்கள் அனைத்தும் தன்னலமற்ற தன்னார்வலர்கள், தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் மீதும் அமீரகத்தின் தலைமை மற்றும் அதன் மக்கள் மீதும் இருக்கட்டும்.” என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்பு, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்ட இந்தியாவின் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள், இந்த கற்கோவிலுக்கு வந்திருந்தார்.

அப்போது, இந்தியாவின் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியின் ஆசீர்வாதங்களுக்கு நன்றி கூறுவதாகவும், இந்தக் கோயில் இந்திய நாகரிகத்தின் நவீனத்தையும் நித்தியத்தையும் பிரதிபலிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!