அமீரகத்தில் தொடங்கவிருக்கும் குளிர்காலம்..!! நாட்டின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என வானிலை மையம் தகவல்….
ஐக்கிய அரபு அமீரகம் இனிவரும் நாட்களில் குளிர்ச்சியான சூழலை அனுபவிக்கும் என்றும் நாட்டில் வானிலை கணிக்க முடியாததாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM), நாட்டின் சில பகுதிகளில் லேசான மழையை எதிர்பார்க்கலாம் என்றும், ராஸ் அல் கைமாவில் பலத்த மழை பெய்யும் என்று கணித்துள்ளது.
அதேசமயம், துபாயில் இன்றும் நாளையும் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து, 25°C வெப்பநிலையில் குளிர்ச்சியான சூழல் நிலவும் என்று மையம் கூறியுள்ளது.
வானிலை தொடர்பாக NCM-ன் டாக்டர் அஹ்மத் ஹபீப் அவர்கள் பேசுகையில், இன்றைய தினம் (வியாழன்) நிலம் மற்றும் கடல் இரண்டிலும் நடுத்தர முதல் குறைந்த மேக மூட்டம் காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அபுதாபி மற்றும் துபாய் இடையேயான பகுதியில் கரையோரத்தை நோக்கி சீராக நகரும் போது மழை பெய்யக் கூடும் என்று கூறிய அவர், நாளை அரேபிய வளைகுடாவில் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.
ராஸ் அல் கைமாவில் கனமழை
NCM கூற்றுப்படி, நாட்டின் வடக்குப் பகுதிகளிலும் ராஸ் அல் கைமாவிலும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மேகமூட்டம் மெதுவாக கிழக்கு நோக்கி நகர்ந்து, ஃபுஜைராவில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளைப் பாதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கடந்த நவம்பரில் நாட்டின் அனைத்து எமிரேட்களும் கனமழையால் பாதிக்கப்பட்டது, பெருமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
முடிவடைகிறது இலையுதிர்காலம்:
அமீரகம் இப்போது இலையுதிர்காலத்தின் முடிவில் இருப்பதாகவும், எதிர்வரும் டிசம்பர் 22-23 இல் அதிகாரப்பூர்வமாக குளிர்காலம் தொடங்கும் என்றும் ஹபீப் தெரிவித்துள்ளார்.
பொதுவாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜனவரி மிகவும் குளிரான மாதமாகும். வரும் பிப்ரவரியில் டிசம்பரை விட குறைவான வெப்பநிலை பதிவாகும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel