அமீரக செய்திகள்

துபாய்: வெள்ள பாதிப்பை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்.. ஷேக் ஹம்தான் உத்தரவு

அமீரகத்தில் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதியன்று பெய்த பெருமழை, துபாய் உட்பட அனைத்து எமிரேட்களையும் கடுமையாக பாதித்தது. சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மழைவெள்ளத்தால் ஏராளமான குடியிருப்பாளர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

இத்தகைய நெருக்கடிக்கு மத்தியில் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு ஆதரவளிக்கும் வகையில் அரசாங்கமும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில், துபாய் அரசு அதன் சமூக உறுப்பினர்கள் கனமழையின் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு உதவியாக புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

துபாயின் பட்டத்து இளவரசரான மாண்புமிகு ஷேக் ஹம்தான் அவர்கள் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள துபாயில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு ஏப்ரல் 23ம் தேதி செவ்வாய்கிழமை அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த தீர்மானத்தில் பின்வரும் ஊழியர்களும் அடங்குவார்கள்:

  • துபாய் அரசு ஊழியர்கள்
  • இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவ ஓய்வு பெற்றவர்கள்
  • துபாய் அரசாங்கத்துடன் இணைந்த சமூக உதவி வைத்திருப்பவர்கள்

இந்த உத்தரவானது சமீபத்திய இயற்கைப் பேரழிவின் பாதிப்புகளுக்கு மத்தியில், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதில் பட்டத்து இளவரசரின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இவ்வாறு முன்கூட்டியே சம்பளம் வழங்கப்படுவது, ஊழியர்களின் குடும்பத் தேவைகளை நிர்வகிப்பதற்கும் தற்போதைய காலகட்டத்தில் அவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக சனிக்கிழமையன்று, எமிரேட்டில் கடுமையான வானிலையின் தாக்கத்தை அவசரமாகத் தணிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு அரசு ஒப்புதல் அளித்திருந்தது.

இதனிடையே, நகரம் முழுவதும் அதிகாரிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளைக் காட்டும் வீடியோவை வெளியிட்ட ஷேக் ஹம்தான், இந்த சவாலான நேரத்தில் பாதுகாப்பைப் பேணுவதற்கும் துன்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுவதற்கும் பங்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.


மேலும், மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆதரவளிக்க துபாய் உறுதியாக இருப்பதாகவும், பதில் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாகவும் கூறிய அவர், அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு ஆன்-கிரவுண்ட் குழுக்கள் பயனுள்ள உதவியை வழங்கும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சமூக தன்னார்வத் தொண்டர்களால் ஆதரிக்கப்படும் துபாய் அரசாங்கத்தின் ஆன்-கிரவுண்ட் குழுக்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமையைப் பற்றிய விரிவான மதிப்பீட்டின் மூலம் தெரிவிக்கப்பட்ட சவால்களுக்கான அவசர தீர்வுகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!