அமீரக செய்திகள்

UAE: கடைக்குள் புகுந்து பெண்ணை கொடூரமாக கொன்ற ஆண் நண்பர்.. தகாத உறவால் வந்த வினை.. கடைக்கும் தீ வைப்பு..!!

அஜ்மானின் தொழிற்துறை பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் கடந்த மே 6 ஆம் தேதி திங்களன்று, சந்தேகத்திற்குரிய ஆசிய நபர் ஒருவர், ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை கொடூரமாக பலமுறை கத்தியால் குத்திக் கொன்று விட்டு, அவர் பணிபுரிந்த கடைக்கும் தீ வைத்துவிட்டுத் தப்பிச் செல்ல முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக அஜ்மான் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் பத்து நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண்ணை கத்தியால் குத்திய அந்த நபரை உடனடியாக கைது செய்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், கைது செய்யப்பட்ட நபர் அந்த பெண்ணை கத்தியால் குத்தி விட்டு, கடையில் பணிபுரியும் மற்ற மூன்று தொழிலாளர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியதாகவும், அனைவரும் ஆசியர்கள் என அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அத்துடன், தாக்குதலுக்கு உள்ளான அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேலும், சிவில் பாதுகாப்பு குழுவுடன் ரோந்து வாகனம், தேசிய ஆம்புலன்ஸ் மற்றும் சிறப்புப் படைகளும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், குடிமைத் தற்காப்புக் குழுக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் அஜ்மான் காவல்துறையின் செயல்பாட்டுத் துறையின் துணை இயக்குநர் லெப்டினன்ட் கர்னல் சயீத் அலி அல் மதானி (Saeed Ali Al Madhani) தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சட்டவிரோத உறவில் இருந்ததும், அவர்களுக்கு இடையே இருந்த தனிப்பட்ட தகராறுகளுமே இந்த தாக்குதலுக்கான காரணம் என தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் கடைக்குள் இருந்தவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அன்று நிகழ்ந்த இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் கடைக்காரர்கள் என்ன நடந்தது என்பதையும் விவரித்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள சிற்றுண்டிச்சாலை உதவியாளரான முகமது என்பவர் கூறுகையில், சம்பவம் நடந்த நாளன்று அஜ்மானின் தொழிற்துறை பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு வழக்கம் போல் பொருள் வாங்க சென்ற போது, இரண்டு விற்பனை பிரதிநிதிகளுக்கு இடையே சூடான விவாதம் நடைபெற்றதைப் பார்த்ததாகவும், பின்னர் இரண்டு ஊழியர்கள் கையில் வெட்டு மற்றும் தலையில் காயத்துடன் அருகிலுள்ள மருந்து கடைக்குச் சென்றதைப் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இது பற்றி கடையில் பணியில் இருந்த ஒரு ஊழியர் கூறுகையில், “கடையில் தீ வைக்கப்பட்டதும், நாங்கள் ஷாப்பிங் வளாகத்தை நாங்கள் காலி செய்தோம். தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன, ஆனால் அதற்குள், தீ உள்ளேயிருந்த அனைத்து பொருட்களிலும் பற்றிக் கொண்டது, இது முழு கடையையும் முழுமையாக தீயில் கருக வழிவகுத்தது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அங்காடிக்கு அருகில் இருந்த கடைக்காரர்கள் கூறுகையில், “மக்கள் அவசரமாக ஷாப்பிங் சென்டரை விட்டு வெளியேறுவதை நாங்கள் கண்டோம், ஆரம்பத்தில், என்ன நடந்தது, ஏன் போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. பின்னரே இந்த துயர சம்பவத்தைப் பற்றி அறிந்து கொண்டோம்” என்றும் கூறியுள்ளனர்.

அத்துடன், கடை முழுவதையும் தீ சூழ்ந்ததால், தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்ததாகவும், தீயணைப்பு இயந்திரங்கள் இரவு 7 மணி வரை அந்த இடத்தில் இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!