அமீரக செய்திகள்

UAE: இன்டர்சிட்டி பேருந்து சேவை மறு அறிவிப்பு வரும் வரை ரத்து.. அமீரகத்தின் சமீபத்திய அப்டேட் அனைத்தும் இங்கே..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவிய சீரற்ற வானிலை அபுதாபி, துபாய் உட்பட அனைத்து எமிரேட்களும் அதிகாலை முதலே பலத்த காற்றுடன் கூடிய மழையை அனுபவித்தது. குறிப்பாக, அபுதாபி மற்றும் துபாயில் இடைவிடாது கனமழை பெய்து வந்ததால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு, போக்குவரத்து இடையூறு மற்றும் விமானச் சேவை பாதிப்பு என பல்வேறு சவால்களை சந்தித்துள்ளன.

அந்த வகையில், அதிகாலை முதலே துபாய் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டதால், துபாயிலிருந்து மற்ற எமிரேட்களுக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி பஸ் சேவையை மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக RTA தனது X தளத்தில் அறிவித்துள்ளது.

மேலும் இத்தகைய நெருக்கடியான சூழலுக்கு மத்தியில், குடியிருப்பாளர்கள் அவ்வப்போது வானிலை நிலவரங்களையும், அதிகாரிகள் வழங்கும் ஆலோசனைகளையும் தெரிந்து கொள்வது அவசியம். அந்தவகையில், அமீரகவாசிகள் தெரிந்து கொள்ள வேண்டிய சில சமீபத்திய புதுப்பிப்புகள் அனைத்தும் பின்வருமாறு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

விமான சேவைகள் பாதிப்பு:

துபாயில் இடைவிடாது பெய்த மழை காரணமாக, துபாய் வரும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, பயணிகள் சாத்தியமான தாமதங்கள் மற்றும் மறு திட்டமிடலுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று அமீரக விமான நிறுவனங்கள் மற்றும் இந்திய விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு அறிவித்துள்ளன.

துபாய் மெட்ரோ சேவை நீட்டிப்பு:

நிலையற்ற வானிலைக்கு மத்தியில் துபாய் மெட்ரோ இயக்க நேரம் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ரயில்கள் சென்டர்பாயின்ட் மெட்ரோ நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் எமிரேட்ஸ் மெட்ரோ நிலையம், விமான நிலைய முனையம் 1, விமான நிலைய முனையம் 3 மற்றும் GGICO நிலையங்களில் மட்டுமே நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது..

அபுதாபி சாலைகளில் வேகவரம்பு மாற்றம்:

அபுதாபியில் கனமழை பெய்ததன் காரணமாக பெரும்பாலான சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. மேலும், நிலையற்ற வானிலை காரணமாக வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி அபுதாபியிலிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்லும் பல சாலைகளின் வேகவரம்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்பு:

அமீரகத்தில் நிலவிய சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்றும் நாளையும் அமீரகம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தொலைதூரக் கல்வி செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை:

அமீரகத்தில் விடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கை காரணமாக அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அரசு உத்தரவிட்டது. மேலும், தனியார் துறை ஊழியர்களையும் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு அமீரகத்தின் மனிதவள அமைச்சகம் தனியார் நிறுவனங்களை அறிவுறுத்தியதை தொடர்ந்து சில தனியார் நிறுவனங்களும் தொலைதூர வேலையை இன்று கடைப்பிடிக்கின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!