துபாய்: பாலைவனத்தில் செழித்து வளரும் ஸ்ட்ராபெர்ரி பண்ணை..!! பார்வையாளர்கள் சுற்றிப்பார்க்க இலவச அனுமதி.. எமிராட்டியின் கனவு நிஜமானது எப்படி..??

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைக்கால வருகையைத் தொடர்ந்து பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது. இத்தகைய கடுமையான வெயிலுக்கு மத்தியிலும் துபாய் நவீன சாகுபடி முறைகளைப் பயன்படுத்தி, ஹத்தாவின் கரடுமுரடான மலைகளுக்கு மத்தியில் ஸ்ட்ராபெர்ரி பண்ணையில் விவசாயம் செய்து வருகிறது.
மேலும், இந்த பண்ணையில் பசுமை இல்லங்கள் முதல் மேம்பட்ட நீர்ப்பாசன முறைகள் வரை அனைத்து சாகுபடி முறைகளும் மேற்கொள்ளப்படுவதால் பழங்கள் ஆண்டு முழுவதும் செழித்து வளரும் என கூறப்பட்டுள்ளது. இங்கு பார்வையாளர்கள் சொந்தமாக ஸ்ட்ராபெர்ரிகளை அதன் அளவைப் பொறுத்து 15 முதல் 30 திர்ஹம்ஸ்க்கு பறிக்கலாம். தற்போதைக்கு பண்ணையில் இலவச நுழைவு வழங்கப்படுகிறது என்றாலும், பின்னர் நுழைவுக்கட்டணம் அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
துபாயின் ஸ்ட்ராபெரி பண்ணை ஸ்ட்ராபெர்ரிகளை உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல், ஜாம் மற்றும் பழச்சாறுகளையும் வழங்குகிறது என்றும், இது உள்ளூர் சந்தைக்கு பங்களிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, பண்ணையில் சாகுபடி செய்யப்பட்ட விளைபொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட இனிப்புகள் மற்றும் தயாரிப்புகளை வழங்கக் கூடிய கஃபே ஒன்றும் எதிர்காலத் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிடைத்த தகவல்களின் படி, இந்த பண்ணையில் தற்போது நான்கு வகையான ஸ்ட்ராபெர்ரிகள் விளைவிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 18,000 நாற்றுகள் அதிநவீன ஹைட்ரோபோனிக் அமைப்பின் கீழ் செழித்து வளர்கின்றன என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்த பண்ணையில் செடிகளுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்காக தண்ணீர் பம்ப் செய்யப்படுகிறது, பின்னர் சுழற்சி முறையில் தண்ணீர் தொட்டிக்குத் திரும்புகிறது, இது தொடர்ச்சியான ஊட்டச்சத்து மற்றும் தண்ணீரை சேமிப்பதை உறுதி செய்கிறது என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் பண்ணையின் கிரீன்ஹவுஸ் செடிகளுக்கு உகந்த வெப்பநிலையை பராமரிப்பதுடன் சவாலான கோடை வெப்பநிலையையும் மீறி ஆண்டு முழுவதும் பழங்கள் செழித்து வளர்வதை எளிதாக்குகிறது. குளிர்காலத்தில் வெளிப்புற நாற்றுகள் செழித்து, உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கும்.
பண்ணை எப்படி தொடங்கப்பட்டது?
கல்பான் ஹுமைத் அல் முதைவாய் என்ற எமிராட்டி நபர், ஐரோப்பிய நாட்டிற்கு சென்றபோது, வயதானவர்களால் நடத்தப்படும் ஒரு சிறிய பண்ணையைக் கண்டுபிடித்திருக்கிறார். அங்கு வாடிக்கையாளர்கள் தங்களுடைய சொந்த ஸ்ட்ராபெர்ரிகளை நேரடியாக பண்ணையில் இருந்து பறித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டதைப் பார்த்து உத்வேகம் கொண்டிருக்கிறார்.
இருப்பினும், அமீரகத்தில் நிலவும் கடுமையான வெப்பநிலைக்கு மத்தியில் எப்படி பயிரிடுவது என்று சந்தேகம் கொண்டிருந்ததாகவும், பின்னர் தயங்காமல் குளிர்காலத்தில் பரிசோதனை செய்ய முடிவு செய்ததாகவும் அல் முதைவாய் தெரிவித்துள்ளார்.
முதலில் பத்து நாற்றுகளின் வெற்றி, நல்ல பலனைத் தந்ததால், அடுத்ததாக குடும்பம் மற்றும் நண்பர்களுடன் அறுவடையைப் பகிர்ந்து கொள்ள ஊக்கப்படுத்தியதாகவும், பண்ணை பற்றிய செய்தி பரவியதும், துபாய் அரசாங்கம் ஆதரவை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரச வருகை
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அவர்கள் சமீபத்தில் இந்த பண்ணைக்கு விஜயம் செய்த போது, அல் முதைவாயின் பணியைப் பாராட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து, அவரது பண்ணையின் புகழ் உச்சத்தை எட்டியிருக்கிறது.
அல் முதைவாய் தொடர்ந்து அவரது பண்ணையில் பல்வேறு புதுமைகளைச் செய்து வருகிறார், குறிப்பாக இடத்தின் செயல்திறனை அதிகரிக்க செங்குத்து நீர்ப்பாசனம் போன்ற புதிய முறைகளை சோதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel